பதிவு செய்த நாள்
03
மார்
2020
10:03
தஞ்சாவூர்: கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் சுவாமி கோவிலில், மாசிமக பெருவிழாவையொட்டி, 63 நாயன்மார்கள் வீதியுலா நேற்று நடைபெற்றது.
தஞ்சாவூர், கும்பகோணத்தில் வரும், 8ம் தேதி மாசிமக தீர்த்தவாரி நடக்கிறது. இதற்காக கடந்த, 28ம் தேதி, மாசிமகத்திற்கு தொடர்புடைய கோவில்களில் கொடியேற்றப்பட்டு, 10 நாட்கள் உற்சவம் துவங்கியது. இதையடுத்து நேற்று காலை ஆதிகும்பேஸ்வரர் கோவிலில், வெள்ளிப்பல்லக்கில் விநாயகர், சுப்ரமணியர், சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர். பின்னர் கோவிலில் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர், மூர்த்திநாயனார், மூர்க்கநாயனார் உள்ளிட்ட, 63 நாயன்மார்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றன. அலங்கரிக்கப்பட்ட தனித்தனி படிச்சட்டங்களில் நாயன்மார்களின் உற்சவர்கள் இரட்டை வீதியுலாவாக ஆதிகும்பேஸ்வரர், சாரங்கபாணி கோவில் வீதிகளில் உலா வந்தது, அப்போது கோவில் யானை மங்களம் முன்னே செல்ல, திருக்குடந்தை சிவனடியார் திருக்கூட்ட தலைவர் நடராஜன் தலைமையில் பக்தர்கள் தேவார திருமுறைகள் பாடிச் சென்றனர்.