பதிவு செய்த நாள்
03
மே
2012
11:05
மோகனூர்: கிராயூர் மாரியம்மன் கோவில் விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் குண்டும் இறங்கி, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். மோகனூர் அடுத்த கிராயூரில், மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் குண்டம் இறங்கும் விழா வெகுவிமரிசையாக நடப்பது வழக்கம். இந்த ஆண்ட விழா, கடந்த 22ம் தேதி காப்புகட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, பக்தர்கள் காவிரி ஆற்றுக்குச் சென்று புனித நீராடி தீர்த்தம் எடுத்து வந்து, கோவில் முன் நடப்பட்டுள்ள கம்பத்துக்கு ஊற்றி ஸ்வாமியை வழிபட்டனர். தினமும் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. கடந்த 29ம் தேதி இரவு 7 மணிக்கு வடிசோறு வைத்து அம்மனுக்கு படையல் வைக்கப்பட்டது. 30ம் தேதி காலை 9 மணிக்கு காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தக்குடம் எடுத்துக்கொண்டு பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். அதை தொடர்ந்து, ஸ்வாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அன்று மாலை பொங்கல் வைத்தும், மாவிளக்கு பூஜையும் நடந்தது. நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தீக்குண்டம் ஏற்படுத்தினர். ஆண்டு தோறும் முஸ்லிம் சமுதாயத்தினர் தீக்குண்டம் அமைப்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, பூக்குழி பூஜை நடந்தது. 7 மணிக்கு கிடா வெட்டு நிகழ்ச்சி நடந்தது. காலை 11 மணிக்கு காவிரி ஆற்றுக்கு சென்ற ஏராளமான பக்தர்கள் புனித நீராடி ஊர்வலமாக வந்து, கோவில் முன் ஏற்படுத்தப்பட்டிருந்த குண்டத்தில் இறங்கி, அம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். அன்று மாலை 6 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், ஊர் மக்கள் செய்திருந்தனர்.