திருப்பரங்குன்றம்: அழகர்கோவில், அரிட்டாபட்டி மலைகள் வரிசையில் சோமகிரி மலை சுற்றுலா பயணிகளின் சொர்க்கப்புரியாக திகழ்கிறது. மேலுார் தாலுகா மேலவளவு அருகிலுள்ள இம்மலையில் காவல் தெய்வமான கருப்பசாமி கோயில் உள்ளது. மலையை சுற்றி அழகுநாச்சி, சிவன் உள்ளிட்ட ஒன்பது தெய்வங்கள் உள்ளன. மலையடிவாரத்தில் கண்களுக்கு எட்டிய துாரம் வரை பரந்து விரிந்திருக்கும் கண்மாய் பார்ப்போருக்கு பரவசத்தை தருகிறது. கரை நெடுகிலும் வானுயர்ந்த மரங்கள், கண்மாய்களில் பறவைகள் கூட்டம், மரங்களில் குரங்குகள் ஆட்டம் என காண்போரை கவருகின்றன.
சேக்கிப்பட்டி – கவட்டையம்பட்டி வழித்தடத்தில் அமைந்துள்ள சோமகிரி மலை கருப்பசாமி கோயிலுக்கு தினமும் மதுரை உள்ளிட்ட பக்கத்து மாவட்டத்தினரும் வந்து செல்கின்றனர். ஞாயிறு அன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். தவிர கார்த்திகை தீபத்திருநாளில் பக்தர்கள் மலைக்கு சென்று தீபம் ஏற்றுகின்றனர். மலை தொடர்ச்சியுள்ள பாறை மாமல்லபுரம் வெண்ணை உருண்டை பாறை போல் அமைந்திருப்பது அழகு. மலையில் ஆங்காங்கு படுகைகள் போன்ற அமைப்புகள் உள்ளன. அதில் ஒன்றில் இருந்த கருப்பசாமியை அடிவாரத்தில் வைத்து கோயில் கட்டி படிக்கட்டுகளை அமைத்துள்ளனர். அருகில் பெரிய குதிரை வாகனத்தில் சுவாமி அமர்ந்திருந்து அருள்பாலிக்கிறார்.