பதிவு செய்த நாள்
13
மார்
2020
01:03
இனிமையுடன் பேசும் ரிஷப ராசி அன்பர்களே!
சூரியன் இந்த மாதம் நற்பலனைக் கொடுப்பார். சுக்கிரன் மார்ச் 28ல் சாதகமான இடத்திற்குச் செல்கிறார். புதன் ஏப்.1ல் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நன்மையளிப்பார். குரு மார்ச் 27ல் அதிசாரம் அடைந்து மகர ராசிக்கு செல்கிறார். இது சிறப்பான இடம். பொருளாதார வளம் பெருகும். சமூகத்தில் மதிப்பு உயரும். அரசு வகையில் உதவி கிடைக்கும். பெண்களுக்கு சாதகமான திசையில் காற்று வீசுவதால் முக்கிய பொறுப்புகளை அவர்கள் வசம் ஒப்படையுங்கள்.
குடும்பத்தில் முன்னேற்றமான சம்பவம் நடக்கும். வீட்டிற்கு தேவையான வசதி, வாய்ப்பு கிடைக்கும். கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். பெண்கள் உதவிகரமாக செயல்படுவர். சகோதர வகையில் ஆதரவு உண்டு. அவர்களால் பொன், பொருள் சேரும். குருவால் மார்ச் 27க்கு பிறகு மகிழ்ச்சி அதிகரிக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும். நீண்ட நாட்களாக தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் கைகூடும். உறவினர் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்களின் மேன்மை அறிந்து சரணடையும் நிலை உருவாகும்.
பெண்களுக்கு குடும்பத்தினரின் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் நல்ல வருமானத்தைக் காண்பர். மார்ச் 28க்கு பிறகு சுபநிகழ்ச்சிகள் கைகூடும். பிறந்த வீட்டில் இருந்து சீதனப் பொருள் கிடைக்கப் பெறலாம். விருந்து, விழா என செல்லும் வாய்ப்புண்டு. சகோதர வகையில் பண உதவி கிடைக்கும். ராகுவால் சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போகலாம். உடல்நலனில் அக்கறை தேவை. உஷ்ணம், பித்தம், மயக்கம், சளி போன்ற உபாதைகள் மார்ச் 23க்கு பிறகு மறையும். பயணத்தின் போது கவனம் தேவை.
சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்கள் திட்டமிட்ட வளர்ச்சிநிலையை எட்டுவர். பெண்களை பங்குதாரராக கொண்ட தொழில் முன்னேற்றம் அடையும். அரசு வகையில் சலுகை கிடைக்கும். வங்கிக் கடன் எளிதாக கிடைக்கும்.
* வியாபாரிகளுக்கு மார்ச் 28க்கு பிறகு எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். பகைவரின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும். குருவின் 7-ம் இடத்துப் பார்வையால் மனதில் துணிச்சல் பிறக்கும். பணவரவு அதிகரிக்கும். தங்கம், வெள்ளி, வைரம் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர்.
* அரசு வேலையில் இருப்பவர்கள் சூரியன் துணையோடு உயர்ந்த நிலையை எட்டிப் பிடிப்பர். சிறப்பான முன்னேற்றம் காணலாம். புதிய பதவியும் கிடைக்கும். வேலையில் மன மகிழ்ச்சி ஏற்படும். சிலர் விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்க பெறுவர்.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு உழைப்புக்கு தகுந்த பலன் கிடைக்கும். சம்பள உயர்வு, சலுகை போன்றவற்றிற்கு தடை இருக்காது.
* தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேறும். அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும்.
* ஐ.டி., துறையினருக்கு அதிகாரம் கொடி கட்டி பறக்கும். மார்ச் 28க்கு பிறகு சகபெண் ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர்.
* வக்கீல்கள் தாங்கள் நடத்தும் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கப் பெறுவர். சக வக்கீல்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
* ஆசிரியர்களின் எதிர்பார்ப்பு பெருமளவில் நிறைவேறும். மார்ச் 27க்கு பிறகு புதிய பதவி கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
* அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்களுக்கு அரசிடம் இருந்து விருது, பாராட்டு கிடைக்கும்.
* கலைஞர்கள் மார்ச் 28க்கு பிறகு சிறப்பான நிலையில் இருப்பர். காரியத்தடை, பொருள் நஷ்டம் முதலியன மறையும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புகழ், பாராட்டு எதிர்பார்த்தபடி இருக்கும்.
* விவசாயிகளுக்கு பணிச்சுமை அதிகமாக இருந்தாலும் வருமானத்திற்கு குறைவிருக்காது. நெல், பாசிப்பயறு, கோதுமை, மஞ்சள், சோளம், கேழ்வரகு போன்றவற்றில் கூடுதலான மகசூல் கிடைக்கும். கால்நடைச்செல்வம் பெருகும்.
* பள்ளி, கல்லுாரி மாணவர்கள் முன்னேற்றம் காண்பர். ஆசிரியர்களின் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். போட்டி பந்தயங்களில் பங்கேற்று வெற்றி காண்பர். தேர்வில கூடுதல் மதிப்பெண்கள் கிடைக்கும். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும்.
சுமாரான பலன்கள்
* வியாபாரிகள் ராகுவால் பொருட்களை களவு கொடுக்க நேரிடும். புதிய வியாபார முயற்சியில் தற்போது ஈடுபட வேண்டாம். இருப்பதை திறமையாக நடத்தினாலே போதும்.
* மருத்துவர்கள் வேலையில் அதிக கவனமுடன் இருக்கவும். மேலதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். சிலர் திடீர் இட மாற்றத்தைச் சந்திக்க நேரிடும்.
* தரகு, கமிஷன் தொழிலில் எதிரி தொல்லை ஏற்படலாம். மறைமுகப் போட்டிகள் அதிகமிருக்கும்.
* அரசியல்வாதிகள் சீரான பலனைக் காண்பர். பலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும்.
* விவசாயிகள் புதிய சொத்து வாங்க சில காலம் பொறுத்திருக்க வேண்டும். வழக்கு விவகாரத்தில் முடிவு சுமாராக இருக்கும்.
நல்ல நாள்: மார்ச் 14,15,16,21,22,23,24,25,29,30 ஏப். 2,3,4,9,10,11,12
கவன நாள்: மார்ச் 17,18 ஏப்.13 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 3,7 நிறம்: சிவப்பு, பச்சை
பரிகாரம்:
* செவ்வாயன்று முருகன் கோயில் வழிபாடு
* ஞாயிறன்று ராகு காலத்தில் பைரவர் பூஜை
* வெள்ளியன்று மகாலட்சுமிக்கு நெய் தீபம்