பதிவு செய்த நாள்
13
மார்
2020
01:03
தன்னலம் கருதாத தனுசு ராசி அன்பர்களே!
இந்த மாதம் சூரியன் சாதகமற்ற இடத்திற்கு சென்றாலும் கவலை வேண்டாம். ஏனெனில் புதன் ஏப்.1 ல் இருந்தும், சுக்கிரன் மார்ச் 28 வரையும் நற்பலன் கொடுப்பர். சுக்கிரனால் பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். மனதில் பக்தி எண்ணம் மேம்படும். குரு மார்ச் 27ல் அதிசாரம் அடைந்து மகர ராசிக்கு செல்கிறார். இது சிறப்பான இடம். அவரால் உங்களது ஆற்றல் மேம்படும். இதுவரை இருந்த மந்த நிலை மாறும். மனதில் துணிச்சல் பிறக்கும். பண வரவு அதிகரிக்கும். தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும்.
கடவுளின் கருணை உங்களுக்கு கிடைக்கும். நினைத்ததை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். தேவைகள் பூர்த்தியாகும். உறவினர் வகையில் மனக்கசப்பு வரலாம். அவர்களிடம் நெருக்கம் வேண்டாம். மார்ச் 23க்கு பிறகு சிலரது வீட்டில் பொருள் திருட்டு போகலாம். விழிப்புடன் இருக்கவும். பெண்கள் குடும்பத்தோடு ஆன்மிகம் அல்லது இன்பச் சுற்றுலா செல்ல வாய்ப்புண்டு. தோழிகள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். வியாபாரம் செய்யும் பெண்கள் அதிக வருமானத்தைக் காண்பர். மார்ச் 27க்கு பிறகு பெற்றோர் வீட்டில் இருந்து சீதனப் பொருள் வரும். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். சிலர் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவர். சனிபகவானால் அக்கம் பக்கத்தினர் வகையில் மனக்கசப்பு வரலாம். வெளியூரில் தங்க நேரிடும். மின்சாரம், நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் கவனமாக செயல்படவும். மார்ச் 23க்கு பிறகு உடல்நிலை சீர்படும்.
சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்கள் தொழில் ரீதியான பயணம் சென்று வெற்றியுடன் திரும்புவர். முக்கிய பொறுப்புகளை குடும்ப பெரியோர்கள் வசம் ஒப்படைத்தால் முடிவு சிறப்பாக அமையும்.
* வியாபாரிகளுக்கு மாத முற்பகுதியில் ஆதாயம் அதிகரிக்கும். ஆன்மிக சம்பந்தபட்ட மற்றும் பூஜை பொருள் வியாபாரம் செய்பவர்கள் வளர்ச்சி காண்பர். மார்ச் 28க்கு பிறகு தங்கம், வெள்ளி, வைர வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர்.
* தனியார் துறை பணியாளர்கள் ஏப்.1க்கு பிறகு சிறப்பான முன்னேற்றம் காண்பர். வேலைபளு குறையும். திறமைக்கு ஏற்ப நற்பெயரும், மதிப்பும் கிடைக்கும். விண்ணப்பித்த கோரிக்கைகள் நிறைவேறும்.
* ஐ.டி. துறையினர் முன்னேற்றம் காண்பர். எதிர்பார்க்கும் சலுகைகளை மார்ச் 28க்குள் கேட்டு பெறவும்.
* வக்கீல்கள் நடத்தும் வழக்குகளில் ஏப்.1க்கு பிறகு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
* ஆசிரியர்களுக்கு மார்ச் 28க்கு பிறகு முயற்சியில் இருந்த தடை, இடமாற்ற பீதி மறையும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
* பொதுநல சேவகர்கள் சிறப்பாக செயல்படுவர். செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த பதவி கிடைக்க பெறுவர்.
* கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ரசிகர்களின் மத்தியில் புகழ், பாராட்டு கிடைக்கும்.
* விவசாயிகளுக்கு அமோக மகசூல் கிடைக்கும். மார்ச் 28க்கு பிறகு சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். ஏப்.1க்கு பிறகு கால்நடை செல்வம் பெருகும். பால்பண்ணை மூலம் நல்ல வருமானம் கிடைக்கும்.
* பள்ளி, கல்லுாரி மாணவர்கள் கடின உழைப்பால் முன்னேறுவர். மார்ச் 28 க்கு பிறகு போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டில் உயர்கல்வி கற்கும் வாய்ப்பு கிடைக்கும்.
சுமாரான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு புதனால் ஏற்பட்ட பகைவர் தொல்லை, அரசு வகையில் இருந்த அனுகூலமற்ற போக்கு ஏப்.1க்கு பிறகு மறையும். வரவு, செலவு கணக்கை சரியாக வைக்கவும்.
* வியாபாரிகளுக்கு பெண்கள் வகையில் தொல்லை, இடர்பாடுகள் வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.
* தரகு, கமிஷன் தொழிலில் ஈடுபடுவோருக்கு மனச்சோர்வு, சுறுசுறுப்பு அற்ற நிலை, இருப்பிட மாற்றம் ஏற்படலாம்.
* அரசு வேலையில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு ஓரளவே கிடைக்கும். இருப்பினும் மாத பிற்பகுதியில் குரு சாதகமாக இருப்பதால் பிற்போக்கான நிலை ஏற்படாது.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் பலனை எதிர்பாராமல் பாடுபட வேண்டியதிருக்கும். இருப்பினும் வழக்கமாக கிடைக்க வேண்டிய சம்பள உயர்வு, பதவி உயர்வுக்கு தடை இருக்காது.
* மருத்துவர்கள் வேலையில் அக்கறையுடன் இருக்கவும். திடீர் இடமாற்றம் ஏற்படலாம். முக்கிய சிகிச்சைகளை ஏப்.1க்கு பிறகு வைத்துக் கொள்ளவும்.
* அரசியல்வாதிகளுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம். சிலர் தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்குவர். எனவே அனைவரிடமும் எச்சரிக்கையுடன் பழகவும்.
* கலைஞர்களுக்கு மார்ச் 27க்கு பிறகு முயற்சிகளில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படும்.
நல்ல நாள்: மார்ச் 14,17,18,21,22,23,29,30,31 ஏப்.1,7,8,9,10,13
கவன நாள்: ஏப்.2,3,4 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 1,5 நிறம்: வெள்ளை, பச்சை
பரிகாரம்:
* தினமும் நீராடியதும் சூரிய நமஸ்காரம்
* வெள்ளியன்று ராகுகால துர்கை வழிபாடு
* பிரதோஷத்தன்று நந்தீஸ்வரர் தரிசனம்