பதிவு செய்த நாள்
14
மார்
2020
11:03
புதுக்கோட்டை: புதுகை அருகே, வாராப்பூர் பாலையடி கருப்பண்ண சுவாமி கோவிலில், மாசி மக திருவிழாவை முன்னிட்டு, மனித ரத்தத்தில் சோறு பிசைந்து எறிந்து, நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது.
புதுக்கோட்டை, ஆலங்குடி அருகே வாராப்பூரில், பாலையடி கருப்பண்ண சுவாமி கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் மாசி மகத் திருவிழாவை முன்னிட்டு, மனித ரத்தத்தில் சோறு பிசைந்து எறியும் விழா, கோலாகலமாக நடக்கும்.விழா காரணம்கடந்த, 200 ஆண்டுகளுக்கு முன் வரை, இக்கோவில் திருவிழாவின்போது, குடும்பத்திற்கு ஒரு ஆண் குழந்தையை, பலி கொடுத்து வந்துள்ளனர். அப்போது, ஒரு குடும்பத்தில், ஒரே ஒரு ஆண் குழந்தை இருந்துள்ளது.பலி கொடுக்க விரும்பாத தாய், அந்த குழந்தையை மறைத்து வைத்து விட்டார். சில மணி நேரத்தில், அந்த குழந்தை, தானாகவே பலி கொடுக்கும் இடத்திற்கு வந்து விட்டது. இதையறிந்த தாய், மடி பிச்சை கேட்டு, கோவில் முன் கதி கலங்கி நின்றுள்ளார்.அவர் முன் கருப்பண்ண சாமி தோன்றி, குழந்தையை பலி கொடுக்காமல், அதன் தொடையை கீறி ரத்தம் எடுத்து, சோற்றில் பிசைந்து படைக்குமாறு கட்டளையிட்டு, மறைந்து விட்டார்.அன்றிலிருந்து, அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளின் ரத்தத்தில், சோறு படைத்து வந்துள்ளனர். கால போக்கில், குழந்தைக்கு பதிலாக, அந்த குடும்பத்தில் உள்ள பெரிய நபரின் தொடைகளை கீறி, ரத்தம் எடுத்து சோற்றில் பிசைந்து, காட்டு பகுதியில் அந்த சோற்றை எறிந்து, நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அந்த சோறு கீழே விழாமல், சாமி படையலாக ஏற்றுக் கொள்ளும் என்பது ஐதீகம்.தொடையில் கீறல்நடப்பாண்டு இந்த விழா நேற்று நடந்தது.
மதியம், 12:00 மணிக்கு கோவிலுக்கு வந்த, மூன்று சிறுவர்களுக்கு பழைய வழக்கப்படி, அரைஞான் கயிறை அறுத்தனர். தொடர்ந்து, பரம்பரையாக உள்ள வழக்கப்படி, ஒருவர் தொடையை கீறி, ரத்தம் எடுத்து சோற்றில் ஊற்றி, பிசைந்து, உருண்டையாக உருட்டி வைத்தனர்.பின், 20க்கும் மேற்பட்ட பூசாரிகள் ஓடி சென்று, அந்த சோற்றை, காட்டு பகுதியில் மேல் நோக்கி வீசினர். இந்த சோறு தயாரித்து படைக்கும் வரை, அந்த குடும்பத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன், கோவில் முன் உள்ள வஷே்டி கூடாரத்தில் அமர்ந்திருந்தார். பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.