பதிவு செய்த நாள்
15
மார்
2020
05:03
கூடலூர்: கூடலூர், ஆமைக்குளம் பகுதியில், காமன் கூத்து விழா பாரம்பரிய முறையில் சிறப்பாக நடந்தது.
நீலகிரி மாவட்டம், கூடலூர், ஆமைக்குளம் உள்ளிட்ட சில பகுதிகளில் பங்குனி மாதத்தில், தன் தவத்தை கலைக்கும், மன்மதனை சிவன், நெற்றி கண்திறந்து எரிக்கும் காமன் கூத்து விழா பாரம்பரியம் மாறாமல், இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய மக்களால் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. ஆமைக்குளம் பகுதியில் நடப்பு ஆண்டுக்கான விழா கடந்த 27ல் துவங்கியது. தொடர்ந்து தினமும் இரவு ரதி - மன்மதன் வேசம் அணிந்து வீடு வீடாக சென்று ஆடும் நிகழ்வு நடந்தது. மன்மதனை சிவன், நெற்றி கண்திறந்து எரிக்கும் விழா நேற்று முன்தினம், மாலை 7:00 மணிக்கு ஆசிர்வாசம் பெறும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன.
இரவு 11:30 மணிக்கு வில்பாலித்தல், பட்டத்து தேர் கன்திறந்து ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து, ரதி - மன்மதன் பரிசம் கட்டுதல், திருமண நிகழ்ச்சிகள்; மொய் விருந்துபசாரம் நடந்தது. நள்ளிரவு 1:30 மணிக்கு சிவபெருமான் தியானத்தில் அமரும் நிகழ்ச்சி; தொடர்ந்து, தூதுவன் வருகை தட்சன் யாகம்; அதற்கு விநாயகர் புறப்படுதல்; வீரபத்திரன் வருகை; தட்சன் வதைப்படலம்;அதிகாலை 5.15 மணிக்கு எமன் பாசக்கயிற்றுடன் காளையன் சிங்கிலி வருகை நிகழ்ச்சிகள் நடந்தது. அதிகாலை 5:30மணிக்கு சிவபெருமான்,நெற்றிக் கண் மூடும் மன்மதனை எரிக்கும் நிகழ்ச்சி பாரம்பரியம் மாறாமல் நடந்தது. இந்நிகழ்ச்சியை ஏராளமான மக்கள் விடிய விடிய கண்விழித்து ரசித்தனர்.