சபரிமலை, ஷீரடி கோவில்களில் பக்தர்கள் வருகைக்கு தடை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மார் 2020 12:03
திருவனந்தபுரம் : கொரோனா அச்சுறுத்தலால் சபரிமலை மற்றும் ஷீரடி சாய்பாபா கோவில்களில் பக்தர்கள் வருகைக்கு தடை செய்து கோவில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனாவின் தாக்கம் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரசினை கட்டுப்படுத்த பல நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தியாவிலும் பாதிப்பு 100 ஆக உயர்ந்துள்ளது. இந்நோயினை கட்டுப்படுத்த மத்திய அரசும் மாநில அரசுகளும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தால் நோய் எளிதாக பரவ வாய்ப்பு உள்ளது என்னுமு் நிலையில் பக்தர்களின் வருகைக்கு தடை செய்து திருவாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கோவில்களில் முக்கிய பூஜை மற்றும் திருவிழாக்களையும் ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது.
தொடர்ந்து, இன்று (மார்ச் 15) சபரிமலை கோவிலில் பக்தர்களின் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. குறைந்த எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே கோவிலில் இருந்தனர். பம்பை - நீலிமலையேற்றம் - அப்பாச்சிமேடு - சன்னிதானத்தில் மிக அமைதியான சூழ்நிலையே நிலவியது. கடைகள் அனைத்தும் மூடியிருந்தன. சபரிமலையில் நடை அடைக்கப்பட்ட நாட்களை போன்ற நிலைமையே தற்போது உள்ளது. தொடர்ந்து, தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு சோபன மண்டபத்தில் 25 கலசங்களில் புனித நீர் நிரப்பி பூஜை செய்து ஐயப்பனுக்கு கலசாபிஷேகம் நடத்தினார்.
கொரோனா பாதிப்பையொட்டி மஹா., மாநிலம் ஷீரடி சாய்பாபா கோவிலிலும் பக்தர்கள் வருகைக்கு கட்டுப்பாடுகளை விதித்து கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. கொரோனா குறித்து பக்தர்களின் பாதுகாப்பிற்காகவும் நோய் பரவுதலை கட்டுக்குள் வைக்கவும் பக்தர்கள் சில நாட்கள் கோவிலுக்கு வர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.