பதிவு செய்த நாள்
17
மார்
2020
10:03
கிருஷ்ணகிரி: தேய்பிறை அஷ்டமியையொட்டி, கல்லுக்குறிக்கி காலபைரவர் கோவிலில், பக்தர்கள் பூசணியில் விளக்கேற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கிருஷ்ணகிரி அடுத்த, கல்லுக்குறிக்கி பெரியஏரி மேற்கு கோடிக்கரையில், 300 ஆண்டுகள் பழமையான காலபைரவர் கோவில் உள்ளது. இங்கு, ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் சிறப்பு வழிபாடு நடக்கிறது. அதன்படி நேற்று காலை, 11:00 மணிக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு யாகம் நடந்தது. பின்னர், கால பைரவருக்கு பூஜைகள், அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் நடந்தன. காலபைரவர் வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நிகழ்ச்சியில், நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூசணி, தேங்காய் மற்றும் அகலில் விளக்கேற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். பின், நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தீர்த்தப்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டன. இதில், கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி, பெங்களூருவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை நிர்வாகிகளுடன், கால பைரவரை குலதெய்வமாக வழிபடும், 165 கிராமத்தினர் செய்திருந்தனர். இதேபோல், கிருஷ்ணகிரி அடுத்த கந்திகுப்பத்தில் உள்ள காலபைரவர் கோவில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் நடந்தன. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.