பதிவு செய்த நாள்
17
மார்
2020
11:03
திருப்பதி : திருமலையில், இன்று முதல், காத்திருப்பு அறையில் காத்திருக்காமல், நேரடி தரிசனத்திற்கு பக்தர்களை தேவஸ்தானம் அனுமதிக்க உள்ளது.
கொரோனா வைரஸ் பரவி வருவதால், திருமலையில் பக்தர்கள், ஒரே இடத்தில் கூடுவதை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகளை, தேவஸ்தானம் எடுத்து வருகிறது. திருப்பதியில் உள்ள, அலிபிரி சோதனை சாவடி மற்றும் நடைபாதை மார்க்கங்களில், சுகாதார பணியாளர்கள், 24 மணி நேரமும், சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டுஉள்ளனர்.காத்திருப்பு அறையில், பக்தர்கள் பல மணி நேரம் கூடுவதால், ஒருவருக்கு ஏற்படும் தொற்று, மற்றவர்களுக்கு பரவும் அபாயம் உள்ளதால், இன்று முதல், 31ம் தேதி வரை, ஏழுமலையானின் நேரடி தரிசனத்திற்கு மட்டுமே, பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
தர்மதரிசனம் முற்றிலும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. தர்ம தரிசன நேரடி ஒதுக்கீடு, 300 ரூபாய் விரைவு தரிசனம், திவ்யதரிசனம் உள்ளிட்ட நேரடி ஒதுக்கீடு தரிசனத்தில் மட்டுமே, பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்பட உள்ளனர்.பக்தர்கள், தங்களின் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் அட்டை, பாஸ்போர்ட் உள்ளிட்ட ஏதாவது ஒரு அடையாள அட்டையை, தங்களுடன் கட்டாயம் கொண்டு வர வேண்டும். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் தான், பக்தர்கள் தரிசனத்திற்கு செல்ல வேண்டும். மேலும், ஆர்ஜித சேவைகளான, விசஷே பூஜை, சகஸ்ர கலசாபிஷேகம், வசந்தோற்ஸவம் உள்ளிட்ட சேவைகளை மார்ச் 31ம் தேதி வரை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளதால், இந்த டிக்கெட்டிற்கு முன்பதிவு செய்த பக்தர்கள், திருமலையில் உள்ள கூடுதல் செயல் அதிகாரி அலுவலகத்திற்கு நேரில் சென்று, அதற்கு பதிலாக, வி.ஐ.பி., பிரேக் தரிசன அனுமதியை பெற்றுக் கொள்ளலாம்.