பொய்கைக்கரைப்பட்டி தெப்பத்தில் நிரந்தரமாக தண்ணீர் தேக்க ஏற்பாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மார் 2020 06:03
மதுரை : மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயிலுக்கான பொய்கைக்கரைப்பட்டி தெப்பக்குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் தேக்க ரூ.38.60 லட்சம் மதிப்பில் 4 போர்வெல்கள், மேல்நிலைத் தொட்டி அமைக்கும் பணி நடக்கிறது.
இத்தெப்பத்தில் மாசி பவுர்ணமியில் தெப்பத்திருவிழா நடக்கும். அழகர்கோவில் மலையில் இருந்து மழை நீர் தெப்பத்திற்கு வரும்படிகல் கோட்டைகளுடன் வாய்க்கால்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக தெப்பத்தில் தண்ணீர் இல்லாததால் கரையைச் சுற்றி உற்ஸவம் நடக்கிறது. வரத்து கால்வாய்கள் துார்வாராததால் தண்ணீர் வருவதில்லை. மைய மண்டபமும் இடியும் நிலையில் உள்ளது. தெப்பத்தில் மீண்டும் தண்ணீர் நிரம்பும் பட்சத்தில் சுற்றுலாப் பயணிகளின் வரவேற்பை பெறும் என பக்தர்கள் கருதுகின்றனர்.தெப்பம் புனரமைப்புபொய்கைகரைப்பட்டி முருகன்: தெப்பத்தின் கரைகள், படிக்கட்டுகள் சேதமடைந்துள்ளன. வரத்து கால்வாய்கள் துார்வாரப்படாமல் உள்ளதால் மழை நீர் வருவதில்லை. முன்பு தண்ணீர் நிரம்பி காணப்பட்ட தெப்பத்தில் தற்போது சொட்டு தண்ணீர் கூட இல்லாதது வேதனையளிக்கிறது. தெப்பத்தை துார்வாரியும், தண்ணீர் தேக்கவும் அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். ரூ.50 கோடி ஒதுக்கீடுகோயில் செயல் அலுவலர் அனிதா (பொறுப்பு) கூறியதாவது: தெப்பத்தின் மைய மண்டபம் சிதிலமடைந்துள்ளது. உயர்நீதிமன்றம் உத்தரவுபடி ஆகம விதிகள், பழமை மாறாமல் தெப்பத்தை புனரமைக்க ஆசியன் வளர்ச்சி வங்கி ரூ.50 கோடி வழங்கவுள்ளது. இந்நிதியில் தெப்பக்குளம், ராய மண்டபம், அழகர்கோவில் கோட்டைச்சுவர் புனரமைக்கப்படவுள்ளது. இதற்காக தொல்லியல்துறை வல்லுனர் சாந்தலிங்கம் தலைமையிலான குழு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
புனரமைப்பு பணிகள் விரைவில் துவங்கும், என்றார்.தண்ணீர் தேக்க ஏற்பாடு மதுரை கிழக்கு தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., மூர்த்தி கூறியதாவது: வறண்ட தெப்பத்தில் திருவிழா நடத்துவது வேதனையளிக்கிறது. முதற்கட்டமாக திருவிழாவின் போது தெப்பத்தில் தண்ணீர் தேக்க கள்ளந்திரியில் நான்கு போர்வெல்கள் அமைக்கப்பட்டுள்ளது. மூன்று போர்வெல்களில் நல்ல தண்ணீர் கிடைத்துள்ளது. 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத்தொட்டி அமைக்கப்பட்டு வருகிறது. போர்வெல் மூலம் தொட்டியில் தண்ணீர் நிரப்பி தெப்பத்திற்கு திருப்பி விடப்படும். மற்ற நாட்களில் குக்கிராமங்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்படும். இப்பணி ரூ.38.60 லட்சம் மதிப்பில் நடக்கிறது, என்றார்.