பதிவு செய்த நாள்
25
மார்
2020
01:03
சூலூர்: கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள, பொதுமக்கள் வீடுகளில் வேப்பிலை தோரணங்களை கட்டி வருகின்றனர்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதால், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. அரசு அலுவலகங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட இடங்களில் வைரஸ் தாக்கம் குறித்து விழிப்புணர்வு பிரசாரங்கள் செய்யப்படுகின்றன. சோப்பு போட்டு கை கழுவுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. வரும், ஏப்.,1 ம் தேதி வரை, தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பொதுமக்கள் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கடைபிடிக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறையினர் பிரசாரம் செய்கின்றனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள, கிராமங்களில், பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன், வேப்பிலை தோரணங்கள் கட்டியுள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்,கிராமங்களில் கோவில் திருவிழாக்கள் நடக்கும் போதும், திருமணம் மற்றும் விசேஷங்கள் நடக்கும் வீடுகள் உள்ள வீதிகளில், நச்சுக் கிருமிகள், விஷ பூச்சிகளால் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க, வேப்பிலை தோரணம் கட்டுவது வழக்கம். இப்போது, கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வீடுகளில் தோரணம் கட்டியுள்ளோம் என்றனர்.