பதிவு செய்த நாள்
25
மார்
2020
02:03
மயிலாடுதுறை: கொரோனா ஊரடங்கு உத்தரவை ஏற்று மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து சிவாயநம என்ற திருமந்திரத்தை ஜபித்து நோயிலிருந்து விடுபட வேண்டும் என்று தருமபுரம் ஆதீனம் 27வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அருளாசி வழங்கினார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாகை மாவட்டம் மயிலாடுதுறை மக்களின் 30 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வந்த மயிலாடுதுறை தனி மாவட்ட கோரிக்கையினை நிறைவேற்றிய தமிழக முதல்வர், உறுதுணையாக இருந்த துணை முதல்வர், தலைமைச் செயலாளர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்கள். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா நோயை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. களத்தில் நின்று சேவை செய்யும் மருத்துவ பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள், பேரிடர் மேலாண்மை குழுவினர் போன்றோரின் சிறப்பான அற்பணிப்பு கலந்த உழைப்பிற்கு ஆசீர்வாதங்கள். மேலும் நேற்று மாலை முதல் ஊரடங்கு உத்தரவை அரசு அறிவித்துள்ளது. இதனை ஏற்று மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து சிவாயநம எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை செபித்து, திருமுறைகளை பாராயணம் செய்தும் அமைதியுடன் இறைவனை பிரார்த்திக்க வேண்டும். எனவே அன்பர்கள் திருநீறணிந்து, திருமுறை ஓதி, திருநாமம் செப்பி, இக்கொடிய நோயிலிருந்து அனைவரையும் விடுபட செய்ய வேண்டும் என எல்லாம் வல்ல ஸ்ரீ செந்தமிழ்ச் சொக்கன் திருவருளைச் சிந்திக்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.