பதிவு செய்த நாள்
27
மார்
2020
02:03
கோவை: கோவையில் உடையம்பாளையம் உட்பட பல்வேறு பகுதிகளில் வேப்பிலை தோரணமும், வீடுகள் தோறும் மஞ்சள் நீர் கிருமிநாசினி தெளிக்கும், பாரம்பரிய முறையும் தீவிரமடைந்து வருகிறது. கொரோனா வைரஸ் நோய் தாக்கம் துவங்கியது முதலே, தமிழர்கள் மறந்திருந்த பாரம்பரிய வழக்கங்கள் மீண்டும் தலைதுாக்கி வருகின்றன.
உலக நாடுகள் கூட கை குலுக்கி வரவேற்பதை தவிர்த்து, நமது பாரம்பரியமான இரு கரம் துாக்கி வணக்கம் சொல்வதையே, கடைபிடிக்க துவங்கியுள்ளன.தொடர்ந்து, நோய் தாக்கத்தை கட்டுப்படுத்தும் மருத்துவ முறையிலும், பாரம்பரிய முறையை கடைபிடிக்க துவங்கியுள்ளோம். தமிழர்களின் ஒவ்வொரு பாரம்பரிய முறையிலும், வைத்தியம் மறைந்திருக்கிறது என்பதே உண்மை. கொரோனாவுக்கு வேப்பிலை!அந்த வகையில் கொரோனாவை கட்டுப்படுத்த, தெருக்கள் தோறும் வேப்பிலை தோரணங்கள் கட்டப்பட்டு வருகின்றன. பீளமேடு, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளை அடுத்து தற்போது உடையம்பாளையம், சவுரிபாளையம் என மாநகரின் பல்வேறு பகுதிகளில் வேப்பிலை காப்பு, மஞ்சள் நீர், பசு கோமியம் கலந்தவை, கிருமிநாசினியாக தெளிக்கப்பட்டு வருகிறது.கணபதி மோர் மார்க்கெட் பகுதியில் மஞ்சள், வேப்பிலை அரைத்து தண்ணீரில் கலந்து அப்பகுதி இளைஞர்கள் தெளித்து வருகின்றனர்.சாணி
மெழுகுதல் எங்கே போச்சு?: நகரங்களில் வீடுகளில் சாணம் மெழுகுவதே மறந்துவிட்ட காலகட்டத்தில், கிராமங்களில் மட்டும் பாரம்பரிய முறை, பழமை மறவாது பின்பற்றப்பட்டு வருகிறது. தற்போது கொரோனாவின் கோரதாண்டவம் நமது பாரம்பரியத்தை எட்டிப்பார்க்க வைத்துள்ளது. தெருக்களின் நுழைவில் கட்டப்பட்டு வரும், வேப்பிலை தோரணமும், வீடுகள் தோறும் மஞ்சள் நீரும், இது எங்க ஏரியா உள்ள வராதே என கொரோனாவை துரத்தும் விதத்தில் உள்ளது. நோயை கட்டுப்படுத்தலாம்உடையம்பாளையத்தை சேர்ந்த கவுரிசங்கர் கூறுகையில்,பாரம்பரியமாகவே சித்த மருத்துவ முறைகள் மூலம் நோயை கட்டுப்படுத்தலாம். எனவே, வேப்பிலை, மஞ்சள் நீர், கோமியம் கலந்த கிருமிநாசினியை நேதாஜி நகர், காமராஜர் காலனியில் உள்ள, 1,500 வீடுகளில் தெளித்துள்ளோம். மற்ற இடங்களிலும் நமது பாரம்பரிய முறையை கடைபிடித்தால் நோயை கட்டுப்படுத்தலாம், என்றார்.வேப்பிலைக்கு கொரோனா கட்டுப்படுகிறதோ இல்லையோ... வீடு கூட்டி, வாசல் பெருக்கி, சாணம் தெளித்து சுற்றுப்புறத்தை துாய்மையாக வைத்துக் கொண்டால், நோய்க்கிருமி அண்டாது என்பதை மறுக்க முடியாது.