பதிவு செய்த நாள்
28
மார்
2020
05:03
அன்னுார்:அன்னுார் வட்டாரத்தில், பல கிராமங்களில், கடைகள் மற்றும் வீடுகளில், வேப்பிலை கட்டப்பட்டுள்ளது.அன்னுார் ஒன்றியத்தில், 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கொரோனா வைரஸ் பரவல் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள, வேப்பிலையும், மஞ்சளும் உதவும் என, மக்கள் நம்புகின்றனர்.
எனவே, அன்னுார் வட்டாரத்தில், கெம்பநாயக்கன்பாளையம், கரியாம்பாளையம், நாகமாபுதுார் உள்ளிட்ட பல கிராமங்களில் பொதுமக்கள் தங்கள் கடைகள் மற்றும் வீடுகளில் வாசலின் மேற்புறத்தில் வேப்பிலை கொத்துகளை சொருகி வைத்துள்ளனர்.வேப்பிலை ஒரு, கிருமி நாசினி என்பதால் கொரோனா வைரஸ் பரவுவதை வேப்பிலை தடுக்கும் என்று நம்பிக்கை கொண்டுள்ளனர். மேலும், பாத்திரத்தில் மஞ்சள் கரைத்த நீரை வைத்துள்ளனர். தங்கள் வீடு அல்லது கடைக்குள் வருவோரை, மஞ்சள் கலந்த நீரில், தங்கள் கைகளைக் கழுவிய பின் வரும்படி அறிவுறுத்துகின்றனர். இதனால், கைகளில் உள்ள கிருமிகள் மஞ்சள் நீரால் கொல்லப்பட்டு விடும் என்ற நம்பிக்கையிலே, பல இடங்களில் மஞ்சள் நீர் கலந்த பாத்திரங்கள், வீடுகள், கடைகள் முன் வைக்கப்பட்டுள்ளன.