பதிவு செய்த நாள்
29
மார்
2020
04:03
பாப்பாரப்பட்டி: பாப்பாரப்பட்டி அருகே, பல்வேறு கிராமங்களில் எல்லை மற்றும் பிரிவு சாலையை மறித்து வேப்பிலை கட்டி, வேலி அமைத்து, பொதுமக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பாப்பாரப்பட்டி அருகே, ஒஜிஹள்ளி பஞ்., சிட்லகாரம்பட்டி, அண்ணா நகர் கொட்டாய் மற்றும் தித்தியோப்பனஹள்ளி பஞ்., குஞ்சிக்கொட்டாயில், கொரோனா வைரஸ் தடுப்பில், கிராம மக்கள் தங்களை ஈடுபடுத்தி கொண்டுள்ளனர். அப்பகுதி மக்கள், பாப்பாரப்பட்டி - பென்னாகரம் சாலையில் இருந்து, தங்கள் கிராமங்களுக்கு பிரிந்து செல்லும் பிரிவு சாலையின் எல்லையில், ஊருக்குள் யாரும் நுழைய முடியாதபடி வேப்பிலை கட்டி, தடை கட்டைகள், முள்வேலிகள் அமைத்து, தடுப்பு ஏற்படுத்தி உள்ளனர். இது குறித்து அப்பகுதியினர் கூறியதாவது: கொரோனா தடுப்பு நடவடிக்கையில் எங்களால் முடிந்தளவு கிராமத்திற்குள்ளே பொதுமக்கள் இருக்கும் வகையில், ஊரின் எல்லை பகுதிகளை மூடியுள்ளோம். யாரும் ஊரைவிட்டு வெளியில் செல்ல முடியாது. வெளி நபர்களும் ஊருக்குள் அனுமதியில்லை. இதன் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கிராமத்தில் தனிமைப்படுத்தி கொள்கிறோம். பெங்களூரிலிருந்து காரில் வருவோர் ஊருக்கு சர்வ சாதாரணமாக வந்து விடுகின்றனர். அவர்கள் மூலம், கொரோனா பரவ வாய்ப்புள்ளது. அதனால், இந்த தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். கொரோனா ஒழிப்பில், அரசின் நடவடிக்கைக்கு உறுதுணையாக இருப்போம். இவ்வாறு அவர்கள் கூறினர்.