பதிவு செய்த நாள்
30
மார்
2020
03:03
திருச்சி: திருச்சியில் ஊரடங்கு உத்தரவை மீறி, கோவில் திருவிழா நடத்தியவர்கள் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக, கடந்த 24ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்க, மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கை அறிவித்தது. இந்நிலையில், கடந்த, 25ம் தேதி, திருச்சி மாநகரில், பெரிய கம்மாளத் தெருவில் உள்ள காளிகா பரமேஸ்வரி கோவில், தேர் திருவிழா நடந்தது. தேர் திருவிழாவில், மாஸ்க் அணிந்தும், அணியாமலும், 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஒரே இடத்தில், மக்கள் அதிகம் கூடும் வகையில், தடையை மீறி தேர் திருவிழா நடத்தியது தொடர்பாக, காந்தி மார்க்கெட் போலீசார், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உட்பட, 50 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.