பதிவு செய்த நாள்
31
மார்
2020
12:03
பெரம்பலுார்: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, துாய்மைப் பணி மற்றும் விழிப்புணர்வில் ஈடுபட்ட துாய்மை பணியாளர்களை, பஞ்., தலைவர் பாதபூஜை செய்து கவுரவித்தார்.
அரியலுார், கண்டராதித்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரா, 56. பி.காம்., பட்டதாரியான இவர், பஞ்சாயத்து தலைவராக உள்ளார். இந்த பஞ்சாயத்தில், ஒன்பது பெண்கள், இரண்டு ஆண்கள் என, 11 பேர் துாய்மை பணியாளர்களாக, பணிபுரிந்து வருகின்றனர்.இவர்களை கவுரவிக்கும் வகையில், அவர்களுக்கு பாத பூஜை செய்யும் நிகழ்ச்சி, பஞ்சாயத்து அலுவலகத்தில் நேற்று நடந்தது. பஞ்., தலைவர் சந்திரா, துப்புரவு பணியாளர்கள், 11 பேருக்கும் புத்தாடைகள் வழங்கி, அவர்களை நாற்காலியில் அமர வைத்து, அவர்களது கால்களை கழுவி, பாத பூஜை செய்தார். தொடர்ந்து, அவர்களின் காலை தொட்டு வணங்கி, நன்றி தெரிவித்தார்.
சந்திரா கூறுகையில், கண்டராதித்தம் பஞ்சாயத்தில், 1,300 குடும்பத்தினர் உள்ளனர். இவர்களுக்காக, இந்த, 11 பேரும், துாய்மை பணியில் ஈடுபடுவதுடன், கொரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி, சிறப்பாக பணியாற்றினர். இதனால், அவர்களை கவுரவித்துஉள்ளோம்.மேலும், என் சொந்த செலவில், தலா, 300 ரூபாய் மதிப்பிலான மூலிகை சோப், மஞ்சள் துாள், மளிகை பொருட்களை, 1,300 குடும்பங்களுக்கும், துாய்மை பணியாளர்கள் மூலம் வினியோகம் செய்துள்ளோம், என்றார்.