பதிவு செய்த நாள்
01
ஏப்
2020
12:04
திருச்சி: நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், சமயபுரம் மாரியம்மன் கோவில் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா, கடந்த மாதம் 15ம் தேதி துவங்கியது.
அன்று முதல், உலக நலனுக்காக மாரியம்மன் பச்சைப்பட்டினி விரதம் இருப்பதாக ஐதீகம். மாரியம்மனிடம் வேண்டுதல் வைத்து நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்களும், அன்று முதல் காப்பு கட்டி விரதம் இருந்து வருகின்றனர். வரும் 5ம் தேதியுடன் விரதம் முடிவுக்கு வருவதால், அன்றைய தினம் பக்தர்கள், சமயபுரம் கோவிலுக்கு வந்து, மாரியம்மனை தரிசித்து விட்டு விரதத்தை நிறைவு செய்வர். ஆனால், தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால், விரதம் இருக்கும் பக்தர்கள், வீட்டிலேயே அம்மனை வழிபட்டு, விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம், என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏப்ரல் 5ம் தேதி துவங்கி, 14ம் தேதி வரை நடைபெறும் சித்திரை தேர் திருவிழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, கோவில் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.