ஒருமுறை வைகுண்டம் சென்ற விஸ்வாமித்திரரிடம் ‘‘ முனிவரே! ஆசனத்தில் அமருங்கள், ஆனால் கொஞ்சம் கவனமாக!’’ என்றார் மகாவிஷ்ணு. அதை காதில் வாங்காமல் வேகமாக உட்காரவே கீழே விழுந்தார். அவர் முனிவரல்லவா! மூக்கு மேல் கோபம் வந்தது. ‘‘நீர் பூவுலகில் மானிடனாகப் பிறக்கக்கடவது,’’ என மகாவிஷ்ணுவைச் சபித்தார். மகாவிஷ்ணு புன்முறுவலுடன், ‘‘கவனமுடனே உட்காரச் சொன்னேன். அதை நீர் பொருட்படுத்தவில்லை. அதோ! உமக்கு எதிரில் நிற்பவர்களைச் சற்று பாரும்’’ என்றார். ராஜா ஹரிச்சந்திரனும், சந்திரமதியும் எதிரில் நின்றிருந்தனர். அவர்களைப் பொய் சொல்ல துாண்டிய நிகழ்வுகள் நினைவுக்கு வந்தன. ‘‘முனிவரே இப்போது உமக்கு புரிந்திருக்கும்! சத்தியத்தின் முன் அசத்தியம் தடுமாறுவது இயல்பு தானே!’’ என்றார். கோபம் தணிந்த முனிவர் கைகூப்பி, ‘‘ சுவாமி! என்னை மன்னியுங்கள். ராஜா ஹரிச்சந்திரன், சந்திரமதி தம்பதி பிரிவதற்கும் காரணமாகி விட்டேன். தாங்களே அதற்கு பரிகாரம் சொல்லுங்கள்’’ என்றார். ‘‘ உம் சாபத்தால் அயோத்தி மன்னர் தசரதரின் மகனாகப் பிறப்பேன். மிதிலையில் ஜனகரின் மகளாக சீதை என்னும் பெயரில் மகாலட்சுமியும் அப்போது இருப்பாள். எங்களை மணவாழ்வில் சேர்ப்பதே உமக்கு பரிகாரம்’’ என்றார். இதனால் சீதாராம கல்யாணத்தை விஸ்வாமித்திரரே முன்நின்று நடத்தி சாபத்தையும் வரமாக மாற்றிக் கொண்டார்.