பதிவு செய்த நாள்
02
ஏப்
2020
03:04
பல்லடம்: கொரோனாவை விரட்ட, பல்லடத்தில், இயற்கை கிருமி நாசினிகளை பயன்படுத்துவதில், பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை தடுக்க மத்திய மாநில அரசுகள், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்காக, நாடு முழுவதும், 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள, பொதுமக்கள் கிருமி நாசினிகளை பயன்படுத்துவதுடன், முக கவசம் அணிந்து, சமூக விலகலை கடைபிடித்து வருகின்றனர். இதனிடையே, இயற்கை கிருமி நாசினிகள் எனப்படும் மஞ்சள், வேப்பிலை உள்ளிட்டவற்றின் பயன்பாடுகளும், மக்களிடையே அதிகரித்துள்ளது. பல்லடத்தில், பெண்கள் வீடுகள் தோறும், வேப்பிலையை கட்டிவைத்து, வீடுகளுக்கு முன், மஞ்சள் கலந்த நீரை தெளித்து வருகின்றனர். மேலும், வாகனங்களிலும், ஒரு சிலர் வேப்பிலைகளை கட்டியபடிதான் வெளியே வருகின்றனர். மக்களிடையே இயற்கை கிருமி நாசினிகளை பயன்படுத்துவது, பல்லடத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.