போதகர் ஒருவர், சக போதகர்கள் புறக்கணித்ததால் தன் நாட்டை விட்டு வேறு நாட்டுக்கு கப்பலில் சென்றார். வழியில் புயல் வீசவே, கப்பல் நொறுங்கியது. தத்தளித்த போதகர் ஒரு மரக்கட்டையின் உதவியுடன் ஒரு தீவை அடைந்தார். அங்கிருந்த மக்களில் ஒருவராக மாறி வாழத் தொடங்கினார். ஒருமுறை கூட தன்னை போதகர் என்று அவர் காட்டிக் கொள்ளவில்லை. மக்களுக்கு நற்செய்தி அறிவிக்கவில்லை. ஆனால் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்தார். தனிமை துயரில் வாடுவோருக்கு ஆறுதல் சொன்னார். எழுத, படிக்க தெரியாதவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுத்தார். இதற்கிடையில் ஒருநாள் சக போதகர்களில் சிலர் அந்த தீவுக்கு வந்து நற்செய்தியை அறிவித்தனர். அதைக் கேட்ட ஒருவர், ‘‘தாங்கள் குறிப்பிடும் ஆண்டவர் இந்த தீவுக்கு ஏற்கனவே வந்து விட்டார்!’’ எனத் தெரிவித்தார். ‘‘யார் அவர்?’’ எனக் கேட்டு சந்திக்க வந்தனர். அவரைக் கண்டதும், ‘‘இவர் எங்களால் விரட்டப்பட்டவர் ஆயிற்றே... இவரா தீவு மக்களின் கண்ணுக்கு ஆண்டவராக தெரிகிறார்?’’ என வியந்தனர். சொல்லை விட செயலுக்கே பலம் அதிகம் என்பதை நிரூபிக்கும் சம்பவம் இது!