பதிவு செய்த நாள்
03
ஏப்
2020
02:04
சேலம்: மாரியம்மன், காளியம்மன் கோவில் பண்டிகை ரத்து செய்யப்பட்ட நிலையில், பக்தர்கள் உருளுதண்டம் போட்டு, நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சேலம், ஜாரி கொண்டலாம்பட்டி மாரியம்மன், காளியம்மன், முனியப்பன், கடகடப்பான் கோவிலில், பங்குனி திருவிழா, நேற்று நடக்கவிருந்தது. ஆனால், ஊரடங்கு உத்தரவால், ஹிந்து சமய அறநிலையத்துறை, போலீசார் அனுமதி தரவில்லை. இதனால், திருவிழா ரத்து செய்யப்படுவதாக, கோவில் வளாகத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று, திரளான பெண்கள், கோவிலுக்கு வந்தனர். அனைத்து மூலவர்களின் சன்னதிகளின் நடைகள் சாத்தப்பட்டிருந்தன. இதனால், நடை வாசற்படிகளில், வேப்பிலை, பூ, பழம் வைத்து, பெண்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். ஆண்கள், உருளுதண்டம் போட்டு, நேர்த்திக்கடன் செலுத்தினர். கூட்டம் கூடியதால், கொண்டலாம்பட்டி போலீசார், பக்தர்களை கலைந்து போகச்செய்தனர். இதுகுறித்து, பக்தர்கள் கூறுகையில், பண்டிகை திட்டமிட்ட நாளில், நேர்த்திக்கடன் செலுத்தாவிட்டால், அம்மனின் கோபத்துக்கு ஆளாக நேரிடும். அதனால், கிருமி நாசினியான வேப்பிலை, மஞ்சள் நீருடன், அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினோம் என்றனர்.