பதிவு செய்த நாள்
04
ஏப்
2020
10:04
மதுரை; மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவை இந்தாண்டும் வழக்கம் போல் நடத்த இடையூறாக இருக்கும் கொரோனாவை ஒழிக்க மூலவருக்கு தினமும் பஞ்சகவி அபிஷேக வழிபாடு நடக்கிறது.
உலக பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஆண்டு முழுவதும் திருவிழா நடக்கும். சித்திரை திருவிழா புகழ் பெற்றது. இந்தாண்டு சித்திரை திருவிழா ஏப்.,25 ல் கொடியேற்றத்துடன் துவங்கவுள்ளது. மே 2 ல் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், மே 3ல் திக்விஜயம், மே 4ல் மீனாட்சி சொக்கர் திருக்கல்யாணம், மே 5ல் தேரோட்டம் நடக்கவுள்ளது. அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் இருந்து கள்ளர் வேடம் பூண்டு அழகர் மே 5ல் மதுரை புறப்படுவார். மூன்று மாவடியில் மே 6ல் எதிர்சேவை நடக்கிறது. மே 7 அதிகாலை தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழந்தருள்கிறார். இவ்விழாக்களை காண லட்சக்கணக்கானோர் திரள்வர்.
ஏற்பாடுகளை மீனாட்சி அம்மன் கோயில், கள்ளழகர் கோயில் நிர்வாகம் செய்ய தயாராக உள்ளது. எனினும், கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவு ஏப்.,14 வரை அமலில் உள்ளதால் அறநிலைத்துறையின் அடுத்தகட்ட நடவடிக்கைக்காக அதிகாரிகள் காத்திருக்கின்றனர். ஊடரங்கு உத்தரவால் கோயில்கள் அடைக்கப்பட்டுள்ளன. ஆறு கால பூஜைகள், நித்ய கால பூஜைகள், துாய்மைப்பணி உள்ளிட்டவை மட்டும் நடக்கிறது. மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா நடந்தால் மட்டுமே கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவமும் நடக்கும். இதற்கு இடையூறாக இருக்கும் கொரோனாவை ஒழிக்கவும், உலக நன்மைக்காகவும் மீனாட்சி அம்மன் கோயில் மூலவருக்கு தினமும் பஞ்சகவி அபிஷேக வழிபாடு நடக்கிறது. இடர்களை போக்கும் திருநீற்றுப்பதிகம் ஓதுவார்களால் பாடப்படுகிறது.