பதிவு செய்த நாள்
05
ஏப்
2020
11:04
திருவண்ணாமலை: ‘கொரோனா பரவலை தடுக்க, ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், வரும், 7-ல், திருவண்ணாமலையில், பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது’ என, மாவட்ட கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, மாதந்தோறும் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் பக்தர்கள், அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்து, கிரிவலம் செல்வர். அவ்வாறு பங்குனி மாத பவுர்ணமி திதி, வரும், 7ல் காலை, 11:21 முதல், 8ல் காலை, 8:53 வரை உள்ளது. தற்போது கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையின்றி சாலைகளில் வாகனங்களில் செல்லவும், நடமாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.இது குறித்து மாவட்ட கலெக்டர் கந்தசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா பரவலை தடுக்கும் வகையில், பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், வரும், பங்குனி மாத பவுர்ணமி வரும், 7 மற்றும், 8ல் வருகிறது. அன்று, திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.