பதிவு செய்த நாள்
06
ஏப்
2020
01:04
குருத்தோலை ஞாயிறு தினத்தை ஒட்டி, நாகப்பட்டினம் - வேளாங்கண்ணி, சென்னை - லஸ் பிரகாசமாதா உள்ளிட்ட கத்தோலிக்க கிறிஸ்தவ சர்ச்சுகளில், குருத்தோலை ஊர்வலம் இல்லாமல், பாதிரியார்கள் மட்டுமே பங்கேற்ற, திருப்பலி நடைபெற்றது.
இயேசு, சிலுவையில் அடிக்கப்பட்ட தினமான, வெள்ளிக் கிழமையை, புனித வெள்ளியாக, கிறிஸ்துவர்கள் அனுஷ்டிக்கின்றனர். சிலுவையில், இயேசு அடிக்கப்பட்டு, அவர் மரித்த பின், மூன்றாம் நாளான ஞாயிறன்று, அவர் உயிர்த்தெழுவதை, ஈஸ்டர் பெருவிழாவாக, கிறிஸ்துவர்கள் கொண்டாடுகின்றனர்.ஈஸ்டர் பண்டிகை கொண்டாடுகிற ஞாயிற்று கிழமைக்கு, முந்தைய ஞாயிற்று கிழமையின் போது தான், குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்படுகிறது.
அன்று, அனைத்து சர்ச்சுகளிலும் திருப்பலி நடப்பதற்கு முன், பாதிரியார்களால் மந்திரித்த தீர்த்தம் எனப்படும், புனித நீரால், குருத்தோலைகள் மந்திரிக்கப்படுகின்றன.பின், அந்த குருத்தோலைகளை, கிறிஸ்துவர்கள் கையில் ஏந்தி, சர்ச்சுக்கு அருகிலுள்ள வீதிகளில் ஊர்வலமாகச் சென்று, பின் சர்ச்சுக்குள் நுழைவது, பாரம்பரிய வழக்கம்.ஊரடங்கு உத்தரவினால், சர்ச்சுகளுக்கு கிறிஸ்துவர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால், கிறிஸ்துவர்கள் சர்ச்சுக்கு செல்லவில்லை; குருத்தோலைகளையும் வினியோகிக்கவில்லை; ஊர்வலமும் நடை பெறவில்லை. நாகப்பட்டினம் - வேளாங்கண்ணி, சென்னை - லஸ் பிரகாசமாதா சர்ச் உள்ளிட்ட, பல்வேறு சர்ச்சுகளில், பிஷப்புகள், பாதிரியார்கள் மட்டும் பங்கேற்ற, திருப்பலி நடைபெற்றது. கிறிஸ்தவர்கள், தங்கள் வீடுகளில் குருத்தோலை ஞாயிறு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். வரும், 9ல், பெரிய வியாழன், 10ல், புனித வெள்ளி, 12ல், ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டங்களும், சர்ச்சுகளில் தவிர்க்கப்பட்டுள்ளன.