பதிவு செய்த நாள்
07
ஏப்
2020
12:04
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில் பங்குனி உத்திரத்தைஒட்டி சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தது. முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் கருதப்படுகிறது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா, பங்குனி உத்திரம், கந்த சஷ்டி விழா உள்ளிட்டவைகள் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும். இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு, பக்தர்கள் வருவதை தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், நாள்தோறும் மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு வருகிறது. பங்குனி உத்திர நட்சத்திர நாளான நேற்று, அதிகாலை, 5:15 மணிக்கு கோ பூஜையும், 5:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 16 வகையான வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பின், காலை, 6:00 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி விபூதி அலங்காரத்தில் காட்சியளித்தார். பகல், 12:00 மணிக்கு உச்சிகால பூஜை நடந்தது. மாலை, 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பங்குனி உத்திரம் தினத்தன்று ஆயிரக்கணக்கானோர் குவிந்து காணப்படும் மருதமலை, நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.