பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னிமடையில் வெளியாட்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதை தடுக்க, வேப்பிலையால் வேலி அமைத்தனர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல கிராமங்களின் நுழைவு வாயில்களில் சானிடைசர் மற்றும் கைகழுவ சோப்புகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், வீடுகளின் முன்பு வேப்பிலையை கட்டி தொங்க விட்டு, சாலை முழுவதும் மஞ்சள்தூள் கலந்த தண்ணீரை தெளித்தும் வருகின்றனர். துடியலூர் அருகே பன்னிமடை ஊராட்சிக்குட்பட்ட செல்வவிநாயகர் நகரில், நகருக்குள் வெளியாட்கள் நுழைவதையும், கிருமிகளை தடுக்கவும் நகருக்கு முன்புறம் வேப்பிலையை கயிற்றால் கட்டி வேலி அமைத்து உள்ளனர். அவசர, அத்தியாவசிய தேவை இன்றி யாரும் இதை கடந்து செல்லக்கூடாது என, கிராம மக்கள் அறிவுறுத்தியுள்ளனர்.