கொரோனாவிலிருந்து விடுபட ஆஞ்சநேயருக்கு சிறப்பு ஹோமம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஏப் 2020 02:04
மயிலாடுதுறை: கொரோனா வைரஸிலிருந்து மக்கள் விடுபடவும், உலக நன்மை வேண்டியும் மயிலாடுதுறை அருகே ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு ஹோமம் நடைபெற்றது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மருத்தூர் கிராமத்தில் பிரிசிபெற்ற ஸ்ரீ ராம வரதாஹினி மடம் அமைந்துள்ளது. இந்த மடத்தில் ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். தைரியத்திற்கு அதிபதியான ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியை வழிபட்டால் சனி உள்ளிட்ட கிரக தோஷங்கள் மற்றும் சத்ரு உபாதைகள் நீங்கி புத்திர பாக்கியம் நோயற்ற வாழ்வு உள்ளிட்ட சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்நிலையில் இன்று கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்கள் விடுபடவும் உலக நன்மை வேண்டியும் ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது. இதில் கணபதி ஹோமம் தன்வந்திரி ஹோமம் மகா மிருத்தியுஞ்சய ஹோமம் மற்றும் அஸ்திர ஹோமம் லட்சுமி ஹோமம் நடத்தப்பட்டு பூர்ணாஹுதி மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து ஹோமத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரைக் கொண்டு சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன. ஹோமம் மற்றும் பூஜைகளை சமூக இடைவெளிவிட்டு சிவாச்சாரியர்கள் நடத்தி வைத்தனர். இதில் குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்கள் கலந்துகொண்டு சமூக இடைவெளியை கடைபிடித்து ஆஞ்சநேய சுவாமியை வழிபட்டனர்.