பதிவு செய்த நாள்
09
ஏப்
2020
03:04
திருப்பத்துார்: ‘கொரோனா தொற்றால், இந்த ஆண்டு, ஷபே பராத் நன்னாளில், இஸ்லாமியர்கள் தங்கள் வீட்டிலேயே தொழுகையில் ஈடுபட வேண்டும்’ என, அமைச்சர் நிலோபர் கபில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்த அவர் விடுத்துள்ள அறிக்கை: கொரோனா தொற்றிலிருந்து தப்ப, மக்கள் வெளியே சுற்றாமல் மற்றவர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும். இந்நிலையில், நாளை (இன்று) இரவு வரும் ஷபே பராத், இஸ்லாமியர்களுக்கு மிக முக்கிய நாளாகும். இந்த இரவு புனிதமான ஒன்றாகும். அன்றைய நாளில், ஆண்கள் மசூதிகளில் தொழுகையில் ஈடுபடுவதும், பெண்கள் வீட்டிலேயே படிப்பதும் வழக்கம். இன்று கொரோனா தொற்றால் உலகமே பாதிப்பில் உள்ளது. இந்தியாவில் இதை கட்டுப்படுத்த, நாடு முழுவதும் ஊரடங்கை அரசு பிறப்பித்துள்ளது. இதனால், தேவையின்றி வீட்டுக்கு வெளியே வர யாருக்கும் அனுமதி இல்லை. மேலும், நாட்டின் அனைத்து மத வழிப்பாட்டு தலங்களான கோவில், தேவாலயம், மசூதி ஆகியவை மூடப்பட்டுள்ளன. இதனால், இஸ்லாமியர்கள் தங்களது ஐந்து வேளை தொழுகையை, வீட்டில் நிறைவேற்ற வேண்டுகிறேன். ஷபே பராத் தொழுகையை, மசூதிகளில் நிறைவேற்ற ஆசை இருப்பது இயல்புதான். எனினும், நம்மில் யாருக்கு கரோனா பாதிப்பு உள்ளது என்பது தெரியாது. பாதிப்பு ஏற்பட்டவர் மூலமாக, மற்றவர்களுக்கு எளிதாக பரவ வாய்ப்பு அதிகம். எனவே, ஷபே பராத் தொழுகையை வீட்டுக்குள்ளேயே நடத்த வேண்டும். இந்த இக்கட்டான நேரத்தில், அரசின் உத்தரவை பின்பற்றி, தொழுகையை வீட்டிலேயே நடத்தி அரசுக்கு ஒத்துழைப்பு தாருங்கள். கபரஸ்தானில் கூடி, துவா செய்வதை தவிர்த்து, மாறாக, அதை வீட்டிலே செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.