திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த வீரபாண்டி திரவுபதியம்மன் கோவிலில் பக்தர்கள் தேரை சுமந்து செல்லும் தூக்குத்தேர் திருவிழா நடந்தது. விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த வீரபாண்டி திரவுபதியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த மாதம் 29ம் தேதி துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தூக்குத்தேர் திருவிழா நடந்தது. நேற்று முன்தினம் இரவு குளக்கரையில் இருந்து கரகம் புறப்பாடாகியது. அலங்கரிக்கப்பட்ட 45 அடி உயரமுள்ள தேரில் அர்ச்சுணன் எழுந்தருளினார். நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க தேரை தோளில் சுமந்து முக்கிய வீதிகள் வழியாக சென்றனர். நேற்று காலை 9 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. அர்ச்சுணன் தவசு ஏறுதல் மற்றும் மகாபாரத கதையை ஒட்டிய நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் தவறு செய்த உத்தரகுமார ராஜாவை தேரில் கட்டி மீண்டும் தேர் புறப்பட்டது. மாலை 4 மணிக்கு தேர் நிலையை அடைந்தவுடன் துரியோதனன் படுகளம், காளியாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மீண்டும் தேர் புறப்பட்டு வீதியுலா நடந்தது. 45 அடி உயர பிரம்மாண்டமான தேரை பக்தர்கள் தோளில் சுமந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு மூன்று முறை வலம் வரும் நூதன தேர் திருவிழாவை காண தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.