பதிவு செய்த நாள்
08
மே
2012
10:05
ஆழ்வார்குறிச்சி:ஆழ்வார்குறிச்சி சுடலைமாடசாமி கோயிலில் சித்திரை கொடைவிழா இன்று (8ம் தேதி) நடக்கிறது.ஆழ்வார்குறிச்சி ராமநதி ஆற்றின் கரையில் சேனையர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட காக்கும் பெருமாள் சாஸ்தா மற்றும் சுடலைமாடசாமி கோயில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை கொடை திருவிழா 3 நாட்கள் கோலாகலமாக நடைபெறும். கொடை விழாவிற்காக கடந்த 1ம் தேதி மதியம் 12 மணியளவில் கொட்டகை கால்நாட்டுதலுடன் விழா துவங்கியது. அதனை தொடர்ந்து நேற்று மாலை 5.30 மணிக்கு மேல் கும்பம் ஏற்றுதலும், குடியழைப்பு வைபவமும் நடந்தது. கொடை திருநாளான இன்று (8ம் தேதி) அதிகாலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் சிவனைந்த பெருமாள் பூஜையும், காலை 8 மணிக்கு மேல் 10 மணிக்குள் பால்குட அபிஷேகமும், மதியம் 12 மணிக்கு மேல் பட்டாணி பாறையில் பழம் எறிதல் வைபவமும், உச்சிக்கால கொடையும் நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு மேல் மகா அபிஷேகமும், இரவு 12.30 மணியளவில் சாமக்கொடை, ஊட்டுக்களம், அர்த்தஜாம பூஜையும் நடக்கிறது.மகா கும்பாபிஷேகத்தை ஆம்பூர் சங்கரசுப்பிரமணிய குருக்கள், சுவாமி அலங்காரத்தை ஆழ்வார்குறிச்சி பிச்சையாபிள்ளை நடத்துகின்றனர். சிறப்பு நிகழ்ச்சியாக மேலப்பாவூர் மாயக்கிருஷ்ணன் குழுவினரின் மேளம், வீ.கே.புதூர் இசக்கி குழுவினரின் வில்லிசை, கல்லிடைக்குறிச்சி நாராயணன் குழுவினரின் செண்டை மேள கச்சேரி ஆகியன நடக்கிறது. நாளை (9ம் தேதி) காலை 10 மணிக்கு சின்னதம்பி பூஜை நடக்கிறது. 15ம் தேதி எட்டாம் பூஜை விழா நடக்கிறது.கொடை திருநாளன்று மதியம் அம்பாசமுத்திரம் வரிசுதாரர்களால் சிறப்பு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர்கள் பண்டாரம், சுடலையாண்டி, அறங்காவலர் குழு தலைவர் பட்சிராஜன், கவுரவ தலைவர்கள் பண்டாரம், ராமசாமி, ஆலய நிர்வாகிகள் தலைவர் சுரண்டை அழகையா, செயலாளர் கீழாம்பூர் பட்சிராஜன், பொருளாளர் ஆழ்வார்குறிச்சி அருணாசலம், துணை தலைவர்கள், துணை செயலாளர்கள், தணிக்கையாளர்கள், ஆலோசகர்கள், நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.