பதிவு செய்த நாள்
29
ஏப்
2020
09:04
கால்நடைகளுக்கு சுகவீனம் ஏற்பட்டு வருமானம் குறைந்தால், நிவர்த்திக்காக அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி கலியுகவரதராஜப் பெருமாள் கோயிலுக்கு வருகிறார்கள். இவர் கல் கம்ப வடிவில் காட்சியளிக்கிறார்.
தலவரலாறு: அரியலூர் சிதளவாடியில் 250 ஆண்டுகளுக்கு முன் கோபாலன் என்பவர் வாழ்ந்து வந்தார். வன்னிய குலத்தைச் சேர்ந்த இவருடைய மகன் மங்கான், மாட்டு மந்தை ஒன்றை நிர்வகித்து வந்தார். மந்தையில் கருவுற்ற நிலையிலிருந்த பசு, மேயச் சென்ற போது காணாமல் போனது. மூன்று நாட்கள் தேடியும் கிடைக்காததால் துயரமடைந்தார். மூன்றாம் நாள் இரவு, அவர் கனவில், ""அன்பனே! கவலைப்படாதே, காணாமல் போன பசு கன்றுடன் மேற்புறமுள்ள காட்டில் இரண்டு மைல் தொலைவில் ஆலமரத்துக்கும் மாவிலிங்க மரத்துக்கும் இடையே சங்கு இலை புதர் அருகேயுள்ளது. காலையில் அங்கே கன்றுடன் பசுவைக் காண்பாய், என இறைவன் கூறி மறைந்தார். காலையில் மங்கான் பணியாட்களுடன் சென்று பார்த்த போது, அந்தப்பசு, தன்கன்றுடன் அம்மாவெனக் கதறியபடியே அவரிடம் வந்தது. பசு நின்ற இடத்தில் சாய்ந்து கிடந்த கம்பம் ஒன்றைக் கோபாலன் கண்டார். அதன் மீது பால் சொரிந்திருந்தது. அக்கம்பத்தை மங்கானும், அவரது பணியாட்களும் வணங்கினர்.
மங்கான், கனவில், பொய்ப்பொருளாம் உன்பசுவை அழைத்துச் சென்று, மெய்ப்பொருளாம் என்னைக் கைவிட்டாய், உன் முன்னோர்க்கும் எனக்கும் உள்ள உரிமைத் தொடர்பை நீ அறியமாட்டாய். திருமாலை வணங்கிய உன் முன்னோர் பெருமாள் கோயில் கட்ட எண்ணி, இங்கு கற்கம்பம் கொண்டு வரும் போது வண்டியின் அச்சு முறிந்ததால், என்னை அங்கேயே விட்டுவந்தார்கள். அதே கம்பம் தான் நீ காண்பது. இதை நிலைநாட்டும் உரிமை உன்னுடையது. கம்பத்தை நிலை நிறுத்தி நாளும் வணங்கு. என்னை நீ உணரவே உன் பசுவை மறைத்து வைத்தேன். உன்னையும் உன் வழித்தோன்றல்களையும் காக்க வந்தவன் நான். கலியுகத்தார் கவலையை நீக்கவே தோன்றினேன். என் பெயர் கலியுக பெருமாள், எனக் கூறி இறைவன் மறைந்தார். மங்கான், அந்த இடத்தில் கோயில் கட்டி வழிபாட்டை துவக்கினார். இதுவே கலியுக வரதராஜப்பெருமாள் கோயிலாக உள்ளது.