கேது தோஷம் போக்கும் மாதவி வனேஸ்வரர் கோயில் திருப்பூர் அருகிலுள்ள திருமுருகன்பூண்டியில் உள்ளது. பாற்கடலில் கிடைத்த அமிர்தத்தை தேவர்களுக்கு பகிர்ந்தளித்தார் மகாவிஷ்ணு. அப்போது ஸ்வர்பானு என்னும் அசுரன் திருட்டுத்தனமாக தேவர்களுடன் சேர்ந்து அமிர்தம் பருகினான். அதை அறிந்த விஷ்ணு, அசுரனை இரு துண்டாக வெட்டினார். அமுதம் பருகியதால் அவனது உயிர் போக வில்லை. அசுரனின் தலைப்பாகம் ஒரு பாம்பின் உடலுடன் சேர்ந்து ராகுவாகவும், உடல் பாகம் பாம்பின் தலையோடு சேர்ந்து கேதுவாகவும் மாறின. இதில் கேது, பூலோகத்திலுள்ள மாதவி வனத்தில் தங்கி சிவனை வழிபட்டதன் பலனாக கிரகப்பதவியை அடைந்தது. கேது பூஜித்த சிவனே இத்தலத்தில் மூலவராக விளங்குகிறார். முல்லை வனமான இங்கு மாலாதரன் என்னும் வேடன் வாழ்ந்தான். காட்டில் பூத்த முல்லை பூக்களைத் தொடுத்து மாலையாக்கி தன் கழுத்திலும், மனைவியின் கழுத்திலும் அணிந்து கொள்வான். மறுநாள் இருவரும் அதை வீசி விடுவது வழக்கம். இவ்வாறு அவர்கள் வீசிய பூமாலை, இங்கிருந்த சிவலிங்கத்தின் மீது தொடர்ந்து விழுந்தன. அறியாமல் செய்த இப்புண்ணிய பலத்தால் அவர்கள் இருவரும் மறுபிறவியில் மன்னர் குலத்தில் பிறந்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களே பிற்காலத்தில் இக்கோயிலைக் கட்டினார். மாதவி (முல்லை) வனத்தில் இருந்ததால் சுவாமிக்கு ‘மாதவி வனேஸ்வரர்’ எனப் பெயர் ஏற்பட்டது. மங்களாம்பிகை தனிச்சன்னதியில் இருக்கிறாள். தீர்க்க சுமங்கலியாக வாழ பெண்கள் அம்மனுக்கு நெய்தீபம் ஏற்றுகின்றனர். கேதுபகவான் தனி சன்னதியில் அருள்புரிகிறார். கேது தோஷம் தீர ஞாயிறன்று ராகுகாலமான மாலை 4:30 – 6:00 மணிக்குள் செவ்வரளி மாலை அணிவித்து, ஏழு முறை சுற்றி வழிபடுகின்றனர். கோயில் முகப்பில் ராஜ கோபுரத்திற்கு பதிலாக பெரிய நந்திசிலை அமைக்கப்பட்டுள்ளது. இதை, ‘ரிஷப தோரணம்’ என அழைக்கின்றனர். கைலாய மலை போலவே இங்கும் வாசலில் நந்தீஸ்வரர் இருப்பதால், இங்கு வருவோருக்கு கைலாயத்தை தரிசித்த புண்ணியம் கிடைக்கும். துர்வாசர் உண்டாக்கிய கிணறு புனித தீர்த்தமாக உள்ளது. செல்வது எப்படி திருப்பூர் – கோயம்புத்துார் செல்லும் வழியில் 8 கி.மீ, விசேஷ நாட்கள்: நேரம்: காலை 6:30 – 7:30 மணி, மாலை 4:00 – இரவு 7:30 மணி தொடர்புக்கு: 04296 – 276 107, 92825 22104, 94434 59074 அருகிலுள்ள தலம்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் 12 கி.மீ.,