மலைக்குத் திரும்பிய அழகர்: மலர் தூவி வரவேற்ற பக்தர்கள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11மே 2012 10:05
அழகர்கோவில்: மதுரை வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தபின், அழகர்கோவில் திரும்பிய கள்ளழகரை பக்தர்கள் மலர் தூவி வரவேற்றனர். அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா மே 2ல் துவங்கியது. முதல் 2 நாட்கள் பல்லக்கில் எழுந்தருளி கோயிலை வலம் வந்தார். மதுரை வைகை ஆற்றில் எழுந்தருள மே 4ல் மாலை தங்கப் பல்லக்கில் புறப்பட்டார். மே 5ல் எதிர்சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வரலாற்று சிறப்பு மிக்க அழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்ச்சி மே 6ல் நடந்தது. பின் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம், தசாவதாரம், பூப்பல்லக்கு என பல்வேறு அலங்காரங்களில் அருள் பாலித்தார். நேற்று மாலை புதூரில் இருந்து புறப்பட்டு, இரவு அப்பன் திருப்பதியில் பூப்பல்லக்கில் எழுந்தருளினார். பின் அதிகாலை புறப்பட்டு கோயிலுக்கு சென்றார். நேற்று காலை 10.15 மணிக்கு கோயில் முன் உள்ள 18ம் படி கருப்பண சுவாமி முன் எழுந்தருளினார். அங்கு தீப ஆராதனைகள் நடந்தன. கோயிலுக்குள் வந்த கள்ளழகரை கூடியிருந்த பக்தர்கள் ""கோவிந்தா கோஷம் எழுப்பி மலர் தூவி வரவேற்றனர். பின் 18 பெண்கள் பூசணிக்காயில் சூடமேற்றி மூன்று முறை அழகரை சுற்றி திருஷ்டி கழித்தனர். இன்று மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம், துணை கமிஷனர் செல்வராஜ் தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.