பதிவு செய்த நாள்
30
மே
2020
02:05
கோவை: இரு கோவில்கள் முன்,இறைச்சியை வீசியதாக ஒருவர் கைது செய்யப்பட் டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கோவை சலீவன் வீதியில்,வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோவில் மற்றும் ராகவேந்திரர் கோவில் அடுத்தடுத்து உள்ளன.
இந்த கோவில்களின் வாசல்கள் முன் நேற்று காலை, 10:30 மணியளவில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் பன்றி இறைச்சியை வீசி சென்றார்.கோவில் முன் பூ விற்பனை செய்து வரும் பெண், இதைப்பார்த்து கோவில் நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து தகவல் அறிந்து, இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்பினர் கோவில் முன் திரண்டனர். கோவில் வாசலில் பன்றி இறைச்சியை வீசி சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தினர். இதையடுத்து, 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கோவை மாநகர சட்டம், ஒழுங்கு துணை கமிஷனர் பாலாஜி சரவணன் விசாரணை மேற்கொண்டார்.
கோவில் அருகே உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். கோவில் முன்பாக வீசப்பட்டு இருந்த இறைச்சி அகற்றப்பட்டு கிருமி நாசினி, மஞ்சள் தெளிக்கப்பட்டது. ராகவேந்திரா சுவாமி கோவில் தலைவர் ரங்கநாதன், வேணுகோபால சுவாமி கோவில் செயல் அலுவலர் பூங்கொடி ஆகியோர் அளித்த புகாரின்படி,கடைவீதி போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிந்து, விசாரிக்கின்றனர்.ஒருவர் கைதுகோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண் கூறுகையில், கோவில் முன் இறைச்சி வீசப்பட்ட வழக்கில், கோவை கவுண்டம்பாளையம், பி அண்ட் டி காலனியை சேர்ந்த ஹரிராம்பிரகாஷ், 48 என்பவர் கைது செய்யப்பட்டார். சிவில் இன்ஜினியரிங் படித்துள்ளார். விவாகரத்து ஆனவர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில், அவர் வந்த வாகனத்தின் எண் பதிவாகியிருந்தது. அதன் அடிப்படையில், விசாரித்து, கைது செய்யப்பட்டுள்ளார், என்றார்.