ராமேஸ்வரம்: தினமலர் செய்தி எதிரொலியாக பாம்பனில் சுவாமி விவேகானந்தர் மண்டபத்தை பாதுகாக்க, கடலில் தடுப்பு வேலி அமைக்கும் பணி துவங்க உள்ளது என கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்தார்.
சூறாவளி காற்று, ராட்சத கடல் அலைகளால் ராமேஸ்வரம் அருகே பாம்பன் குந்துகாலில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் பின்புற தடுப்பு சுவரை சேதம் அடைந்து விழுந்ததால், கட்டடத்திற்கு விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது என தினமலரில் படத்துடன் செய்தி வந்தது. இதனையடுத்து நேற்று கலெக்டர் வீரராகவராவ் நினைவு மண்டபத்தை ஆய்வு செய்து, மீன்துறை அதிகாரிகளிடம் ஆலோ சனை நடத்தினார். கலெக்டர் கூறியதாவது: விவேகானந்தர் மண்டபம், குந்துகால் மீனவர் கிராமத்தை கடல் அரிப்பில் இருந்து பாதுகாக்க ரூ.1.87 கோடியில் பாறாங்கல்லில் தடுப்பு சுவர் (318 மீட்டர் நீளம், 1.6 மீட்டர் உயரம்) அமைக்கும் பணி, சில நாட்களில் துவங்கும்.மேலும் குந்துகாலில் அமைக்கப் பட்ட மீன் இறக்கும் பாலம் கட்டுமான பணி 95 சதவீதம் முடிந்தது. நிலையில், சில மாதத்தில் மீனவர்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்றார்.