பதிவு செய்த நாள்
03
ஜூன்
2020
02:06
மதுரை : சிங்கப்பூர் சென்ற மதுரை சிவாச்சாரியார்கள், 53 பேர் நாடு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர்.
மதுரை, மானாமதுரை, திருப்பரங்குன்றம், பிள்ளையார்பட்டி கோவில் பாடசாலை மாணவர்கள் உட்பட, 53 சிவாச்சாரியார்கள், சிங்கப்பூர் வீரகாளியம்மன் கோவில் விழாவிற்கு, ஹோமம் நடத்த, மார்ச் இரண்டாவது வாரம் சென்றனர். ஊரடங்கால், சர்வதேச விமான சேவை ரத்து செய்யப்பட்டது. மூன்று மாதங்களாக, நாடு திரும்ப முடியாமல் அங்கு உள்ளனர். குடும்பத்தினர் மத்திய, மாநில அரசுகளிடம் புகார் அளித்தும், நடவடிக்கை இல்லை.மீனாட்சி அம்மன் கோவில் பட்டர் உக்கிரபாண்டியன் கூறுகையில், இவர்களின் குடும்பத்தினர் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு விரைவில் மீட்க வேண்டும், என்றார். சிங்கப்பூர் மற்றும் வளைகுடா நாடுகளில் ஏராளமான தமிழக, கேரள மாநிலத்தவர் சிக்கி, நாடு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். கேரள அரசு, அம்மாநிலத்தவரை துாதரகம் மூலம் பேசி, சிறப்பு விமானங்கள் மூலம் மீட்க ஏற்பாடு செய்கிறது. ஆனால், தமிழகத்தில் அதுபோல் முனைப்பு காட்டுவதில்லை.