“அப்பன் இரந்துண்ணி; ஆத்தாள் மலைநீலி ஒப்பறிய மாமன் உறி திருடி– சப்பைக்கால் அண்ணன் பெருவயிறன் ஆறுமுகத்தானுக்கு இங்கு எண்ணுங்கால் பெருமை இவை” என்று பாடினார் காளமேகப்புலவர். முருகப்பெருமானின் தந்தையான சிவன் பிச்சை ஏற்று பிழைப்பவர். அன்னை பார்வதி மலையில் பிறந்த கோபக்காரி. மாமன் திருமாலோ வெண்ணெய் திருடுபவர். அண்ணனான விநாயகர் பெருவயிறு கொண்டவர். இவர்களே ஆறுமுகனின் பெருமை மிக்க குடும்பத்தினர்கள். இகழ்வது போல இருந்தாலும், ஆழ்ந்து படித்தால் மட்டுமே உண்மை புரியும். பக்தர்களிடம் உள்ள தீமைகளை திருவோட்டில் பிச்சையாக ஏற்கிறார் சிவன். தீமையை அழிக்கும் போது கோபத்தில் நீலியாகி நீதி காக்கிறாள் பார்வதி. வெண்ணெய் போல நல்லவர் உள்ளத்தை திருடுகிறார் திருமால். அண்டங்களை வயிற்றில் தாங்கியதால் விநாயகர் பெருவயிறுடன் இருக்கிறார். வஞ்சப்புகழ்ச்சியாக கவிதையில் செய்த விளையாட்டு இது.