முல்லாவுக்கு ஒரு பால்கன் பறவை கிடைத்தது. இதற்கு முன்பு இப்பறவையை பார்க்காத அவருக்கு அதன் அகன்ற தாடை, வளைந்த அலகு, அதிகளவில் உள்ள சிறகுகள் ரசிக்கத் தக்கதாக தோன்றவில்லை. ‘‘என்ன இருந்தாலும் புறாவின் அழகு வருமா? உன்னையும் புறாவைப் போல அழகுபடுத்துகிறேன்’’ என்று சொல்லி அதிகமாக இருந்த இறகுகளைப் பிய்த்தெடுத்தார். வளைந்த அலகைச் செதுக்கி வளைவைக் குறைத்தார். ஒரு கத்திரியை எடுத்து அதன் தாடையின் அளவையும் குறைத்தார். ‘‘இப்போதுதான் புறா போல அழகாக இருக்கிறாய்’’ என்றார். பெரும்பாலும் நாம் இப்படித்தான் செயல்படுகிறோம். நம்மிடம் இருந்து மற்றவர்கள் மாறுபட்டு இருந்தால், அதை சரியா, தவறா என சிந்திக்க விரும்புவதில்லை. நம் கருத்துக்கு ஏற்ப அவர்களை மாற்றவே முயற்சிக்கிறோம். பால்கன் பறவையின் அழகை ரசிக்கத் தவறிய முல்லா போல, மற்றவர்களிடம் உள்ள நல்லதை பார்க்கத் தவறுகிறோம். நம்மிடமிருந்து வேறுபடுவதை தவறாகக் கருதி, நம் வழிக்கு மாற வேண்டும் என எதிர்பார்க்கிறோம். இதனால் தான் உலகில் இத்தனை பிரச்னைகள். பால்கன் பறவையை பால்கனாகவே பார்ப்பது ஒன்றே பிரச்னைக்கான ஒரே தீர்வு!