பதிவு செய்த நாள்
07
ஜூன்
2020
11:06
சபரிமலை; வரும், 14 முதல், சபரிமலையில், பக்தர்கள் நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்பட உள்ளனர். கொரோனா தொற்று தொடர்பாக, பங்குனி மாதம் முதல், சபரிமலையில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
எனினும், நடை திறந்து, மாத பூஜைகள் மட்டும் நடைபெற்றன. கொரோனா தளர்வுகள் அமல்படுத்தப்படுவதால், சபரிமலையில் பக்தர்களை கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்க, கேரள அரசு முடிவு செய்துள்ளது. எனினும், தரிசனத்திற்கு முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சபரிமலை வரும் பக்தர்கள், நிலக்கல் மற்றும் பம்பையில், தெர்மல் ஸ்கேன் எனப்படும், உடல் வெப்ப நிலை சோதிக்கப்படுவர். மேலும், கோவிலுக்குள், ஒரே நேரத்தில், 50 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.புதிய கட்டுப்பாடுகளுடன், சபரிமலை, பக்தர்களுக்கு திறப்பது குறித்து, கேரள, தேவசம் போர்டு அமைச்சர், கடகம்பள்ளி சுரேந்திரன், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: வரும், 14ல், கோவில் நடை, பக்தர்களுக்காக திறக்கப்படுகிறது. இதற்காக, பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன. கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதிபடுத்தும் சான்றிதழ் உள்ள, வெளிமாநில பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். மேலும் உள்ள நிபந்தனைகள் குறித்து, கோவிலின் தகவல் அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டறிந்து கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.