பதிவு செய்த நாள்
10
ஜூன்
2020
10:06
சபரிமலை : கேரளாவில் நேற்று கோவில்கள் திறக்கப்பட்டன. சபரிமலை நடை ஜூன், 14 மாலை திறக்கப்படுகிறது. தரிசனத்திற்கான முன்பதிவு இன்று(ஜூன் 10) துவங்குகிறது.
திருவனந்தபுரம் பத்மனாப சுவாமி கோவில், குருவாயூர் கோவில் உட்பட அனைத்து கோவில்களும் நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு திறக்கப்பட்டன. வாசலில் கை கழுவ தண்ணீர், சோப்பு வைக்கப்பட்டிருந்தது. காய்ச்சல் பரிசோதனை நடத்தப்பட்ட பின், பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஒரு நேரத்தில், 10 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஊழியர்கள் முகக் கவசம் மற்றும் கையுறை அணிந்திருந்தனர். பிரசாத விநியோகம் நடைபெறவில்லை.
சபரிமலை: சபரிமலை நடை ஜூன், 14 மாலை திறக்கப்படுகிறது. இங்கு ஒரு மணி நேரத்தில், 200 பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். சன்னிதானத்தில் ஒரு நேரத்தில், 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். காலை, 4:00 முதல் பகல், 1:00, மாலை, 4:00 முதல் இரவு, 11:00 மணி வரை தரிசனம் உண்டு. 10 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி கிடையாது. சபரிமலை தரிசனத்திற்கு, கேரள போலீசின் இணையதளத்தில், இன்று முதல் முன்பதிவு செய்யலாம். வெளிமாநில பக்தர்கள், கோவிட் 19 நெகட்டிவ் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டும். கேரளா செல்வதற்கான இ - பாஸ் பெற வேண்டும். ஆனி மாத பூஜை மற்றும் ஆராட்டு திருவிழாவுக்காக, வரும், 28 வரை சபரிமலை நடை திறந்திருக்கும்.