புதுச்சேரி : குருபெயர்ச்சியை முன்னிட்டு மொரட்டாண்டி நவக்கிரக கோவிலில் குருபகவானுக்கு அதிதேவதை, பிரத்தியதி தேவதை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. புதுச்சேரியை அடுத்த மொரட்டாண்டி நவக்கிரக கோவிலில் வரும் 17ம் தேதி மாலை 6.18 மணிக்கு குருபகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பிரவேசிக்கிறார். இதனையொட்டி காலை 9 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக சாந்தி ஹோமம், கோ பூஜை, மகாலட்சுமி ஹோமம் ஆகியவை நடக்கிறது. விழாவை முன்னிட்டு உலகிலேயே மிக உயரமான 12 அடி உயர குருபகவானுக்கு அதிதேவதை, பிரத்தியதி தேவதை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. மேலும் யானை வாகனத்துடன் கூடிய பஞ்சலோக கவசமும் சமர்பிக்கப்பட உள்ளது. விழா ஏற்பாடுகளை சிவஸ்ரீ சிதம்பரம் குருக்கள், கீதாசங்கர குருக்கள், கீதாராம் குருக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.