* கண்ணாடி போல கண்கள் இரண்டும் உள்ளத்தில் இருப்பதை அப்படியே மற்றவர்களுக்கு வெளிப்படுத்தி விடும். * பிறரிடம் பலன் எதிர்பார்த்து அன்பு செலுத்துவது கூடாது. கைமாறு கருதாத அன்பே துாய்மை மிக்கது. * ஆணவம் நிழல் போல மனிதனை விடாமல் பற்றி இருக்கிறது. அதை அகற்றுவது எளிதானது அல்ல. * அவித்த நெல் மீண்டும் முளைப்பதில்லை. அதுபோல ஆசையற்ற ஞானிகள் மண்ணில் மீண்டும் பிறப்பதில்லை. * பெற்றோர் மீது அன்பு இல்லாதவன், கடவுளின் அருளுக்குப் பாத்திரமாக முடியாது. * கடவுளை வணங்க வெறும் பூஜை முறைகள் பயனில்லை. முதலில் மனத்தைச் சுத்தமாக்குங்கள். * பணத்திற்காக ஏங்கித் தவிக்கிறோம். ஆனால், கடவுளுக்காக நாம் யாரும் அழத் தயாராயில்லை. * பற்று, தாய்க்கு தன் குழந்தையிடம் உள்ள பாசம், மனைவி மீதுள்ள காதல் ஆகியன மிக ஆழமானவையாகும். அதுபோல் இம்மூன்று கவர்ச்சிகளும் ஒருங்கே ஒருவனுக்கு கடவுளிடத்தில் அமையுமானால், அந்த மனஆற்றலே அவனை கடவுளிடத்தில் சேர்த்து விடும். * கண்ணாடியில் அழுக்கு படிந்திருந்தால் உருவம் தெரியாதது போல, மனதில் அழுக்கு படிந்திருந்தால் கடவுள் தெரிய மாட்டார். * கடவுளால் தான் எல்லாம் நடக்கிறது என்ற எண்ணம் வரும் வரையில் மனிதனுக்கு பிறவிகள் தொடரும். * கடவுள் மனிதனின் மனதில் தங்கியிருக்கிறார். அந்த விடுதியை பத்திரப்படுத்திக் கொள்வது தான் நம் தலையாய கடமை.