பதிவு செய்த நாள்
19
ஜூன்
2020
01:06
ஓசூர்: ஓசூர், சந்திரசூடேஸ்வரர் கோவிலில், கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட, சிறுவன் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். ஓசூர் மலை மீது, பழமையான மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவில் உள்ளது.
ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், தங்கத்தேர், பஞ்சலோக சிலைகள், மரகத சிலைகள் மற்றும் விலை மதிப்பில்லாத பல நூற்றாண்டுகளை கடந்த, 30க்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளன. கடந்த, 2ல் இரவு, 11:30 மணிக்கு, கோவில் காம்பவுண்ட் சுவரை ஏறி குதித்து, உள்ளே புகுந்த மூன்று கொண்ட கும்பல், கோவில் கதவை உடைத்து, உண்டியல் பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்தது. இவை, சிசிடிவி கேமராவில் பதிவாகாமல் இருக்க, அவற்றை அக்கும்பல் அடித்து உடைத்தது. காவலாளி ரங்கன் எழுந்து வந்ததால், மர்ம கும்பல் தப்பியது. இது குறித்து, ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், பாகலூர் சாலையில் உள்ள நல்லூர் சோதனைச்சாவடியில், ஹட்கோ போலீசார் நேற்று நடத்திய வாகன சோதனையில், உத்தனப்பள்ளியை சேர்ந்த, 17 வயது சிறுவன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த சின்னராஜ், 22, சாரண்டப்பள்ளியை சேர்ந்த பாண்டியராஜ், 22, ஆகிய மூவர் சிக்கினர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், சந்திரசூடேஸ்வரர் கோவிலில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால் அவர்கள் மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.