விவேகத்தின் இலக்கணமாகத் திகழ்பவர் நீதிமான் விதுரர். கவுரவர்களின் தந்தையான திருதராஷ்டிரனுக்கு ஆறுதல் அளிக்கும் விதத்தில் இவர் கூறிய அறிவுரைகளின் தொகுப்பு விதுரநீதி. மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை இந்நுால் கூறுகிறது. அவற்றை வாழ்வில் கடைபிடிப்போமா... * வலிந்து போய் யாருக்கும் அறிவுரை சொல்லாதீர். கேட்டால் மட்டுமே சொல்ல வேண்டும். * மற்றவர்கள் போற்றும் போது மகிழ்ச்சியோ, துாற்றும் போது துக்கமோ அடைய வேண்டாம். * முடிந்து போன விஷயத்தை எண்ணி வருந்தாதீர். * முடிந்த பகையைத் மீண்டும் துாண்டி வளர்ப்பது நல்லதல்ல. * பேச்சை அடக்குவது கடினம். அது சுருக்கமாகவும், பொருட்செறிவுடன் இருப்பது அவசியம். * ஆயுதங்களால் ஏற்பட்ட காயம் ஆறிவிடும் ஆனால் கொடிய வார்த்தைகளால் ஏற்பட்ட புண் ஆறுவதில்லை. * முதுமையில் மகிழ்ச்சியாக வாழ விரும்புவன் அதற்குரிய கடமைகளை இளமை காலத்திலேயே செய்து முடிக்க வேண்டும். * அகந்தை, குற்றம், வீண் பேச்சு, அதிக கோபம், சுயநலம், நம்பிக்கைத் துரோகம் ஆகிய ஆறும் ஆயுளை வெட்டும் கூரிய கத்திகள்.