சென்னை: கொரோனாவை இன்று(ஜூன் 21) நிகழும் சூரிய கிரஹணம் குறைக்குமா, அதிகரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த ஆண்டின் துவக்கம் இனிமையாக இருந்தாலும் கொரோனா வைரஸ் தொற்றால் பொருளாதார மந்தநிலை, மக்கள் பாதிப்பு என தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகின்றன. இதனால் உலகம் அழியும் என்ற வதந்தி எழுந்துள்ளது.
சூரியனை பூமிச் சுற்றி வரும் காலத்தை அடிப்படையாக கொண்ட கிரிகோரியன் காலண்டர் முறை பயன்படுத்தப்படுகிறது. இது அறிவியல்பூர்வமானது என வல்லுனர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். 1582ம் ஆண்டுக்கு முன் அதாவது இந்த காலண்டர் பயன்பாட்டிற்கு வருவதற்கு இரண்டு நுாற்றாண்டுக்கு முன்பாக பல வகையான காலண்டர்கள் பயன்படுத்தப்பட்டன. அதில் மிக முக்கியமானவை மாயன் ஜூலியன் காலண்டர். மாயன் காலண்டர் 2012 டிசம்பர் 21ம் தேதிக்கு பின் கணிக்கப்படவில்லை. அதனால் உலகம் அழியும் என அப்போதே வதந்தி பரவியது; அப்படி ஏதும் நிகழவில்லை.
கிரிகோரியன் காலண்டர் 1752ல் ஆண்டு அறிமுகப் படுத்தப்பட்டபோது ஜூலியன் காலண்டரில் உள்ள 11 நாட்களை கணக்கிடவில்லை. அதன் கணக்குப்படி மாயன் காலண்டர் கூறிய இறுதி நாள் ஜூன் 21-ம் தேதி தான் என கூறப்படுகிறது. சூரிய கிரஹணம் நிகழும் இந்நாளில் மீண்டும் உலகம் அழியும் என்ற தகவல் பரவியது. கடந்த ஆண்டு டிசம்பரில் சூரிய கிரஹணம் நிகழ்ந்த காலக்கட்டத்தில் உருவானதாக கூறப்படும் கொரோனா வைரஸ் தொற்று உலகையே உலுக்கி எடுக்கிறது.இன்று நிகழும் சூரிய கிரஹணம் கொரோனா தொற்றின் வீரியத்தை குறைக்கும் என ஒரு தரப்பு ஜோதிடர்கள் கூறினாலும் மற்றொரு தரப்பினர் இது வீரியத்தை அதிகப்படுத்தும் என்கின்றனர். எனவே வதந்திக்கும், கணிப்பிற்கும், இன்றைய சூரிய கிரஹணம் முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.