பதிவு செய்த நாள்
21
ஜூன்
2020
11:06
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உற்சவங்கள், ஊரடங்கு விலக்கப்பட்ட பின், உரிய பரிகாரங்கள் செய்து, முறைப்படி நடத்தப்படும் என, அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தோஷம்திருச்சியில், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர், சமயபுரம் மாரியம்மன், வயலுார் முருகன், உறையூர் வெக்காளியம்மன் போன்ற பிரசித்தி பெற்ற கோவில்கள் உள்ளன. ஊரடங்கால், கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.ஐந்து கட்டமாக ஊரடங்கு நீடித்திருப்பதால், கோவில்களை திறக்க வேண்டும்; கோவில் உற்சவங்களை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
இந்நிலையில், முதல்வர், ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ஆகியோருக்கு, பக்தர்கள் சார்பில் அனுப்பப்பட்டுள்ள மனு:கொரோனா தொற்று காரணமாக, மார்ச் மாதம் முதல், வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டு, வழக்கமான உற்சவங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.கோவில் உற்சவங்களை நடத்தாமல் தவிர்க்கும் போது, தோஷம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, உலக மக்கள் நன்மைக்காக, ஸ்ரீரங்கம் கோவிலில், ஆகம விதிப்படி, தீர்த்தர்கள், ஸ்தலத்தார்கள் மற்றும் கைங்கரியர்களை கொண்டு உற்சவங்களை நடத்த வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஊரடங்குஇது குறித்து, ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கூறியதாவது:தவிர்க்க முடியாத காரணங்களால், கோவில் உற்சவங்களை நிறுத்தி வைக்கும்போது, ஆகம விதிப்படி, அதற்கான பரிகாரங்களும் சொல்லப்பட்டுள்ளது. அதனால், தோஷம் ஏற்பட வாய்ப்பு இல்லை.ஊரடங்கு முழுமையாக விலக்கப்பட்ட பின், உரிய பரிகாரங்கள் செய்து, ஸ்ரீரங்கம் கோவிலில் உற்சவங்கள் நடத்தப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.