பதிவு செய்த நாள்
22
ஜூன்
2020
09:06
திருப்பூர்: தாம்பாள தட்டின் மீது உலக்கையை நிறுத்தி வைத்து, சூரிய கிரகண நேரம் கணிக்கப்பட்டது.
ஆனி அமாவாசை நாளான நேற்று, சூரிய கிரகணம் ஏற்பட்டது. நேற்று காலை, 10:22 மணி முதல், பகல், 1:35 மணி வரை, கிரகணம் நிகழ்ந்தது. கிராமப்புறத்தில் மட்டுமல்ல, நகர்ப்புறத்திலும், பாரம்பரிய முறைப்படி, உலக்கையை வைத்து சூரிய கிரகணம் பிடிக்கும் நேரம் கணிக்கப்பட்டது.திருப்பூர் மாவட்டம், அவிநாசி, சேவூர் உள்ளிட்ட இடங்களில், இத்தகைய முறையை கிராம மக்கள் பின்பற்றினர். குடும்பத்தினர் கூறுகையில், பஞ்சாங்கத்தில், சூரியன் மற்றும் சந்திர கிரகணம் வரும் நேரம் உள்ளிட்ட விவரம் குறிப்பிட்டிருந்தாலும், பாமர மக்களுக்கு தெரியாது. அதன்படி, உலக்கையை, தாம்பாள தட்டில் செங்குத்தாக நிறுத்தி, சூரிய கிரகணம் வந்து, சென்றதை கணித்தோம். எங்கள் முன்னோர் கூறியபடியே, இன்றும் சூரிய கிரகணத்தை உலக்கை வைத்து கணிக்கிறோம். அதன்பிறகே, பரிகாரபூஜை மற்றும் வழிபாடு செய்கிறோம் என்றனர்.