பதிவு செய்த நாள்
22
ஜூன்
2020
01:06
திண்டுக்கல்; சூரிய கிரஹணத்தையொட்டி, திண்டுக்கல்லில் வீடுகளின் முன், உலக்கையை நிறுத்தி வழிபாடு நடத்தினர்.சூரிய கிரஹணம் நேற்று துவங்கியதும், திண்டுக்கல் நாகல்நகர் புதுாரில், உலக்கையை நேராக நிற்க வைத்தனர்.
உலக்கை கீழே சாயாமல், நிலையாக நின்றது. மூன்று மணி நேரம் நின்ற நிலையில், கிரஹணம் முடிந்ததும் கீழே சாய்ந்தது. அப்பகுதியினர் உலக்கையை வணங்கி சென்றனர். நாகரத்தினம், 72, என்பவர் கூறியதாவது:கடந்த, 40 ஆண்டுகளாக, இவ்வாறு வழிபாடு நடத்துகிறோம். கிரஹணத்தின் போது மட்டுமே, உலக்கை செங்குத்தாக நிற்கும்.
இது போன்ற நேரங்களில் உணவருந்தினால் செரிமானம் ஆகாது.கிரஹணம் முடிந்த பின்பே சாப்பிட வேண்டும் என்பதை கடைப்பிடித்து வருகிறோம். இதனால், குடும்பத்தில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.இவ்வாறு, அவர் கூறினார்.மாவட்டத்தின் பிற இடங்களிலும், உலக்கை வழிபாடு நடந்தது. புதுக்கோட்டை, கொத்தமங்கலம் பகுதியில் வசிப்பவர், செல்வா, 37; விவசாயி. இவர் நேற்று காலை, 11:00 மணியளவில், சூரிய கிரஹணத்தின்போது, வீட்டு வாசலில், மஞ்சள் தண்ணீர் ஊற்றிய தாம்பாளத்தில், ஒரு உலக்கையை நேராக நிறுத்தினார்.உலக்கை எந்த ஒரு பிடிமானமும் இன்றி, நேராக நின்றது. கிரஹணம் நிறைவடையும் போது, 12:30 மணிக்கு, உலக்கை தானாக கீழே விழுந்தது.